Sunday, September 30, 2007

World Chess Championship - வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்

மெக்ஸிகோவில் நடைபெற்று முடிந்த உலக செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில், 14 சுற்றுகளில் 9 புள்ளிகள் பெற்று, ஆனந்த் வெற்றி வாகை சூடினார். உலகின் டாப் 8 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட, மிக மிகக் கடினமான ஒரு களத்தில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது! சூழல் தரும் அழுத்தத்தை சிறப்பாக எதிர்கொண்டு, நிதானத்தையும் கவனத்தையும் (Patience and Concentration) தொடர்ந்து பல நாட்கள் தக்க வைத்துக் கொண்டு, ஆனந்த் இந்தப் பட்டத்தை வென்று உலக சேம்பியன் ஆகியிருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

இந்தியாவில் செஸ் நல்ல பிரபலம் அடைந்திருப்பதற்கும், தற்சமயம் பல இளம் இந்திய ஆட்டக்காரர்கள் உலக அலவில் ஆடவல்ல திறமையை பெற்றிருப்பதற்கும் விஸ்வநாதன் ஆனந்த் ஒரு சிறந்த முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் T-20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகப் பட்டத்தை வென்று விரைவில் தாயகம் திரும்பவுள்ள ஆனந்துக்கு எந்த விதமான வரவேற்பு அளிக்கப்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! இதை நான் குறிப்பிடவில்லை, ஆனந்தே ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்!

அவருக்கு (உரிய) சிறப்பான வரவேற்பும், கௌரவமும் அளிக்கப்பட வேண்டும் என்பது என் போன்ற செஸ் ரசிகர்களின் அவா! Congratulations Anand, for this Superlative Achievement and bringing Laurels to Our Country!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 366 ***

குழந்தை லோகபிரியா நலமாய் - நன்றியுடன்

அன்பான நண்பர்களே,

டிசம்பர் 31 2006 அன்று குழந்தை லோகபிரியாவிற்கு இருதய அறுவை சிகிச்சைக்காக வந்த வேண்டுகோள் பற்றி இந்தப்பதிவுவாயிலாக வெளியிட்டிருந்தேன்

வலையுலகு மற்றும் மற்ற நண்பர்கள், ஆர்வலர்களது உதவியுடனும், நல்லாசிகளுடனும் குழந்தை லோகபிரியா இருதய அறுவை சிகிச்சை 24/01/2007 அன்று நல்ல படியாக நடந்து முடிந்தது பற்றி இந்தப் பதிவில் எழுதியிருந்தேன்.

நேற்று நண்பர் சங்கரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.அது அப்படியே உங்கள் பார்வைக்கு.

*****************************************************************************

அன்புள்ள பாலாஜி

நொம்ப நாட்களாக ஃபோனிலும், தெரிந்தவர் மூலமாகவும், இருதய அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை லோகப்பிரியா நலம் பற்றி விசாரித்து அறிந்து கொண்டிருந்தோமல்லவா.. அதன் தொடர்ச்சியாக

நேற்று குழந்தை லோகப்ரியாவை அழைத்துக் கொண்டு அவரது தாயார் என் வீட்டிற்கு வந்திருந்தார்.

"ஆபரேஷன் முடிந்து 8 மாதங்களாகி விட்டது. அவ்வப்போது குழந்தைகளுக்கே உண்டான சிறு காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற சிறு சிறு உபாதைகள் தவிர குழந்தை நல்லபடியாக இருக்கிறாள்.ரெகுலராக ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு செக் அப்பிற்கு போய் வருவதாகவும் டாக்டர்கள் குழந்தை நார்மலாக இருக்கிறாள் , இனி ஒரு கவலையும் இல்லை. என்று தெரிவித்ததாகவும் சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.


குழந்தை 15.01.2007 அன்று தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியதாகவும், இப்போது அவளது தந்தை கவலையற்று தினம் வேலைக்கு செல்வதாகவும், தான் இன்னும் ஒரு 6 மாதம் பார்த்து விட்டு , பின் ஏதாவது வீட்டு வேலைக்கு போகலாம் என்று இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

லோகபிரியாவின் வாழ்வில் விளக்கெற்றி வைத்து தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி சொல்லும்படி கண்களில் நன்றி ததும்ப திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்.


குழந்தை நல்ல துறு துறுப்பாக ஓடியாடி விளையாடுகிறது...ஆபரேஷன் மற்றும் மருந்து மாத்திரைகளால் கொஞ்சம் பூஞ்சையாக இருக்கிறது.ஆனால் நாளாவட்டத்தில் தேறி விடும் என்று நினைக்கிறேன்.


நண்பர்களுடன் சேர்ந்து செய்த ஒரு நன்முயற்சியின் வெற்றியும் பலனும் கண் முன்னே கண்ட போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என் சார்பாகவும் , வலையுலக நண்பர்கள் சார்பாகவும் குழந்தைக்கு வாழ்த்து சொல்லி, பிறந்த நாள் பரிசும் கொடுத்தனுப்பினேன். இந்தச் சமயத்தில் உதவி செய்த நமது வலையுலக நண்பர்கள அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.


இதை நானே வலை பதியலாம் என்று நினைத்தேன்..ஆனால் உன் வலைப் பதிவில் போட்டால் தொடர்ச்சி இருக்கும் என்பதால் உனக்கு அனுப்பியுள்ளேன்.


Bala..a great job..well done..Thanks to one and all.

அன்புடன்...ச.சங்கர்


****************************************************************************

இதைப் பதிவதுடன் இந்த நேரத்தில், உதவிய நண்பர்களுக்கும், குழந்தை லோகபிரியா குணமடைய வாழ்த்திய / பிரார்த்தித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா


***365***

Wednesday, September 26, 2007

364. பிரமிக்க வைத்த உலகக்கோப்பை வெற்றி

இந்திய-பாக் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த T-20 இறுதிச்சுற்று போட்டி, அபாரமான, பல திடுக் தருணங்கள் நிறைந்த, பலமில்லா இதயங்கள் கொண்டவர்களுக்கு ஒவ்வாத ஒன்று என்று மட்டும் நிச்சயமாகக் கூற முடியும் :)

டாஸில் வென்ற தோனி எப்போதும் போல் பேட் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்து 3 (இங்கிலாந்து, தெ.ஆ, ஆஸ்திரேலியா எதிராக) மகத்தான வெற்றிகளுக்கு தலைமை தாங்கிய மாவீரரின் முடிவை குறை சொல்ல நான் யார்? தோனி தனது திட்டம் 175-180 ரன்களை இலக்காக நிர்ணயிப்பது என்று கூறியிருந்தார்.

பாகிஸ்தான் (உமர் குல், தன்வீர், ஆசிப்) சிறப்பாக பந்து வீசினர். இந்திய பேட்டிங் சோபிக்கவில்லை. யுவராஜும், தோனியும் அதிக ரன்கள் எடுக்காவிட்டாலும், கௌதம் கம்பீர் மிகவும் பொறுப்புடன், அதே நேரத்தில் பிரமாதமான ஆட்டம் ஆடி 75 ரன்கள் (54 பந்துகள்) எடுத்தார். கம்பீர் எடுத்தது, இந்தியா எடுத்த மொத்த (157) ரன்களில், கிட்டத்தட்ட பாதி! இன்னிங்க்ஸின் இறுதியில் ரோஹித் எடுத்த 30 ரன்கள் (16 பந்துகள்) குறிப்பிடப்பட வேண்டியவை. ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக எதுவும் இல்லாததால், நாம் ஒரு 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாகத் தான் எனக்குத் தோன்றியது.

இம்ரான் நசீரும், ஹ·பீஸ¤ம் களமிரங்கினர். RP சிங்கின் முதல் ஒவரில் (வெளி செல்லும் பந்தைத் தொட்டு!) உத்தப்பாவிற்கு கேட்ச் கொடுத்து, ஹ·பீஸ் OUT! அடுத்த ஸ்ரீசாந்த் ஓவரில், எதிர்பார்த்தது போலவை, இம்ரான் வெறியாட்டம் ஆடியதில் 21 ரன்கள்! ஆனாலும் RPS நிதானம் இழக்காமல், மூன்றாவது ஓவரில் (இந்த முறை உள்ளே வந்த பந்து வாயிலாக!), அக்மலை Clean bowled செய்ததில் ஸ்கோர் 26-2. தனது முதல் ஓவரில் 21 ரன்கள் தந்த ஸ்ரீசாந்த், அடுத்து ஒரு maiden ஓவர் வீசியது மிக்க பாராட்டுக்குரியது.

ஆட்டத்தின் முக்கியமான turning point என்று நான் நினைக்கும் விஷயம் 6வது ஓவரில் நிகழ்ந்தது. அது உத்தப்பா செய்த (நசீர் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் நம்மிடமிருந்து கை நழுவிக் கொண்டிருந்த கட்டத்தில்) அற்புதமான (direct hit) ரன் அவுட்! அடுத்த 4 ஓவர்களில் பாகிஸ்தான் 17 ரன்கள் மட்டுமே எடுத்து, யூனுஸ் கானையும் இழந்ததில், நம் அணியினருக்கு நம்பிக்கை அதிகமாகி, பாகிஸ்தானுக்கு பிரஷர்!

இந்த கட்டத்தில், பதானும், ஜோகிந்தரும் திறமையாக பந்து வீசிக் கொண்டிருந்தனர். அடுத்த முக்கிய நிகழ்வுகள் பதானின் (12வது) ஓவரில் வீழ்ந்த 2 விக்கெட்டுகள்! தேவையான ரன் ரேட் கூடிக் கொண்டே (அப்போது 9.11) போவதைக் கண்டு, கேப்டன் ஷோயப் மாலிக் அடிக்கப் போய், ரோஹித்துக்கு சுலபமான கேட்ச் வழங்கி OUT ! 'அவசர அடி' (ஷாஹித்) அ·ப்ரிடி, தான் எதிர்நோக்கிய முதல் பந்தை mid-off திசையில் தூக்கி அடித்தார். அதிக உயரம் சென்ற பந்தை, அருமையாக ஜட்ஜ் செய்து, ஸ்ரீசாந்த் பிடித்தது ஒரு சூப்பர் கேட்ச்! இந்த கட்டத்தில், ஸ்கோர் 78/6, தேவையான ரன்ரேட் 10.00 (8 ஓவர்கள் பாக்கி). Definitely, India was in the Driver seat :)

அடுத்த 3.5 ஓவர்களில், மிஸ்பாவும், அரா·பட்டும் ஜோடி சேர்ந்து 26 ரன்கள் சேர்த்தனர். பதானின் கடைசி ஓவரில் (ஆட்டத்தின் 16வது ஓவரில்) அரா·பட் clean bowled. இர்·பான் பதான் பந்து வீச்சு 4-0-16-3

3 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்த நிலையில், பாகிஸ்தானிய வெற்றிக்கு 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவை (பிரதி ஓவர் 13.5 ரன்கள்). இந்த நிலையில், இந்தியா சுலபமாக வென்றிருக்க வேண்டும்! ஆனால், ஹர்பஜன் வீசிய மிக மிக மோசமான 17வது ஓவரால் தான், ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது!

அது ஒரு விசேஷமான ஓவர், அரை ஓவர் maiden, மீதி அரை ஓவரில் மிஸ்பா 3 ஸிக்ஸர்கள் அடித்தார்! மிஸ்பா பிரமாதமாக ஆடினார் என்று கூறுவதை விட, அனுபவமிக்க ஹர்பஜன் பிரஷரில் மோசமாக பந்து வீசினார் என்றே கூறுவேன்! இப்போது 3 ஓவர்களில் 35 ரன்கள் என்ற நிலைமை. எனக்கோ சரியான கடுப்பு, டென்ஷன் :-(

அடுத்து, ஸ்ரீசாந்த் தன் பங்குக்கு, 18வது ஓவரில் 15 ரன்கள் தாரை வார்த்தார். Bat-ஐக் கூட சரியாகப் பிடிக்கத் தெரியாத தன்வீர், 2 ஸிக்ஸர்கள் அடித்தது, பெரிய கொடுமை! Cricket is a great leveller! ஆனால், அந்த ஓவரின் கடைசிப் பந்தில், ஸ்ரீசாந்த் தன்வீரை clean bowled செய்து, மீண்டும் என் நம்பிக்கையைத் துளிர்க்க வைத்தார்!

2 ஓவர்கள் - பாக் வெற்றிக்கு 20 ரன்கள்! போட்டியின் 19வது ஓவரை வீசிய RP சிங், அது தான் அவர் வாழ்க்கையில் வீசும் கடைசி ஓவர் என்று எண்ணச் செய்யும் அளவுக்கு, டென்ஷன் ஆகாமல், மிகத் திறமையாக, வைராக்கியத்துடன் பந்து வீசினார். இவ்விளைஞர் வெகு தூரம் செல்வார் என்பது என் நம்பிக்கை.

ஓவரின் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தந்து, ஐந்தாவதில் உமர் குல்லின் ஸ்டம்பை முறித்தார்! பாக் 141-9, இந்தியாவுக்கும், உலகக் கோப்பை வெற்றிக்கும் இடையே இருந்தது ஒரு பாகிஸ்தானிய விக்கெட் மட்டுமே!!! துரதிருஷ்டவசமாக ஓவரின் கடைசிப் பந்தில், edge வாயிலாக, ஆசிப்புக்கு பவுண்டரி கிட்டியதில், இறுதி ஓவரில் பாகிஸ்தானிய வெற்றி இலக்கு 13 ரன்கள்!

ஹர்பஜனா, ஜோகீந்தரா என்று யோசித்த தோனி, கடைசி ஓவரை வீச ஜோகீந்தரை அழைத்தார். அன்று ஞாலம் அளந்த பிரானையும், துங்கக் கரிமுகத்துத் தூமணியையும் நான் தியானிக்கத் தொடங்கினேன்! என்னளவில் உடலசைவு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன் (கிரிக்கெட் செண்டிமெண்ட் பா:))

மிஸ்பா தயார்! ஜோகீந்தரின் முதல் பந்து ஒரு பெரிய wide - 12 ரன்கள் தேவை - அடுத்த பந்தில் ரன் இல்லை - அடுத்த பந்து மிஸ்பா அடித்த அடியில் ஸிக்ஸருக்குப் பறந்தது! இப்போது 4 பந்துகளில் 6 ரன்கள் தேவை!

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன் நடந்த ஷார்ஜா ஆட்டமும், மியதாத் சேத்தன் சர்மாவை அடித்த கடைசிப் பந்து ஸிக்ஸரும் என் ஞாபகத்தில் நிழலாடின! ஜோகீந்தர் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மூன்றாவது பந்தை ஒரு slow Fulltoss-ஆக வீசினார். அதை மிஸ்பா fine leg தலை மேல் தூக்கி அடிக்கு விதத்தில் ஆட முயற்சித்த ஷாட் சற்றே, "மிஸ், பா" ஆகி பந்து மட்டையில் சரியாகப் படாமல், உயரே பறந்தது!

ஸ்டேடியத்தின் இரைச்சலையும், சூழலின் அழுத்தத்தையும் மீறி, வரலாற்று சிறப்பு மிக்க அந்த காட்சை ஸ்ரீசாந்த் பிடித்தே விட்டார் :) T20 உலகக் கோப்பையை இளைய பாரத அணி வென்றே விட்டது!!! 24 ஆண்டுகளுக்குப் பின் மற்றொரு உலகக் கோப்பை!

சமீபத்தில் நடைபெற்ற (ஒரு நாள்) உலகக் கோப்பை போட்டிகளில், முதல் சுற்றிலேயே நாம் வெளியேறிய அவமானம் இந்த அற்புதமான வெற்றியால் துடைக்கப்பட்டு விட்டது! அது போலவே, மியதாத் அடித்த கடைசிப் பந்து ஸிக்ஸர் என்ற துர்சொப்பனம் இனிமேல் என்னைத் துரத்தாது :)

"நீவிர் இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்ற வைணவப் பாரம்பரிய வாழ்த்துக்களை, உலகக் கோப்பையை வென்ற இளைய பாரதத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் :)

சக் தியா இந்தியா !!!!!!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 364 ***

Sunday, September 23, 2007

362. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய பாரதத்தினாய் வா வா வா!

வலிமை மிக்க தோளினாய் வா வா வா! நாளை பாகிஸ்தானை வெல்லுவாய் வா வா வா!

நேற்று நடந்த இந்திய-ஆஸ்திரேலிய WC T-20 அரைஇறுதி ஆட்டத்தை வென்ற இந்திய அணியைப் பற்றி தான் சொல்கிறேன்! நேற்றும் டாஸில் வென்ற தோனி, வழக்கம் போல முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய வம்சாவழியினர் நிறைந்த டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியம் களை கட்டியிருந்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று பேரிரைச்சல் :)

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள், சேவாகுக்கு width தராமல் திறமையாக பந்து வீசினர். எனக்கு எப்போதும் போல லேசான டென்ஷன்:) சேவாக் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டு, ரோஹித் அவருக்கு ரன்னராக களம் வந்தார். ஆட்டத்தின் டெம்போவை தொடக்கத்திலேயே பாதித்த இது தேவையில்லாத ஒன்று என்பது என் எண்ணம்! சேவாக் பேசாமல் retired hurt என்று களத்தை விட்டு சென்று, உத்தப்பா ஆட வந்திருக்க வேண்டும்.

சேவாகும், கம்பீரும் அவுட்டாகி வெளியேறியதில் ஸ்கோர் 41-2 (8 ஓவர்கள்). மட்டமான தொடக்கம் என்றே சொல்ல வேண்டும்! உத்தப்பாவும் தடவி தடவித் தான் ஆடிக் கொண்டிருந்தார். யுவராஜ் களமிறங்கியவுடன் ஆட்டம் சூடு பிடித்தது. கிளார்க் வீசிய பந்தை ஸிக்ஸர் அடித்தது வாயிலாக, ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்த ஆஸ்திரேலியர்கள் மனதில் சந்தேக விதைகளை விதைத்தார்!

இப்போது யுவராஜும், உத்தப்பாவும், நாங்கள் மெரினா கடற்கரையில் (சிறுவயதில்) ஆடிய 'Four and Sixer' ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில், ஆஸ்திரேலியப் பந்து வீச்சை சிதறடித்ததில் "நான்கு-ஆறு" மழை பொழிந்தது! 11வது ஓவரில் 19 ரன்கள், கிளார்க் வீசிய 14வது ஓவரில் நடந்த படுகொலையில் 21 ரன்கள், யுவராஜ் 21 பந்துகளில் அரைசதத்தை எட்டி விட்டார், ஸ்கோர் 125 (14.3 ஓவர்களில்) ! அதாவது, 6.3 ஓவர்களில் உத்தப்பா-யுவராஜ் ஜோடி ஈட்டியது 84 ரன்கள் (12.92 ரன்கள் பிரதி ஓவர்!!!)

சைமண்ட்ஸின் திறமையான ·பீல்டிங்கில் உத்தப்பா ரன் அவுட்! உத்தப்பா 34 ரன்கள் (3 ஸிக்ஸர்கள்). களமிறங்கிய தோனி தன் பங்குக்கு சைமண்ட்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்து, டெம்போவை நிலை நிறுத்தினார். தோனியின் ஆட்டத்தின் சிறப்பம்சம், அவரது மணிக்கட்டின் அபரிமிதமான வலிமை, அதனால், பந்து பவுண்டரி நோக்கி விரையும் வேகம்!

தனது வெறியாட்டத்தை யுவராஜ் முடித்துக் கொண்டபோது, அவர் எடுத்த ரன்கள் 70 (முப்பதே பந்துகளில், 5x4, 5x6), ஸ்கோர் 155-4 (17.3 ஓவர்கள்) ! இறுதியில் இந்தியா 188 ரன்கள் எடுத்து, தனது இன்னிங்க்ஸை நிறைவு செய்தது. தோனி 18 பந்துகளில் 36 ரன்கள். யுவராஜ் இறுதி வரை ஆடியிருந்தால், இன்னும் 20 ரன்கள் வந்திருக்கும்!

நமது பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினால், மேட்ச் இறுதி ஓவர் வரை செல்லும் என்று தான் எனக்குத் தோன்றியது. கில்கிரிஸ்ட்-ஹெய்டன் ஜோடி முதலில் தடுமாறினாலும் (ஸ்ரீசாந்த் மிகச் சிறப்பாக பந்து வீசினார்) 5 ஓவர்களில் 36 எடுத்த நிலையில், ஸ்ரீசாந்த் வீசிய ஆறாவது ஓவரின் முதல் பந்து கில்கிரிஸ்டின் ஸ்டம்பை சிதறடித்தது! அந்த ஓவர் முடிந்தபோது ஸ்ரீசாந்த் spell 3-1-6-1, அபாரமான பந்து வீச்சு!

ஹாட்ஜ் விக்கெட் இழந்தபோது ஸ்கோர் 68-2 (8.4 ஓவர்கள்). தேவையான ரன் ரேட் 10.7 ! ஆஸ்திரேலியாவால் இயலும் என்று தான் தோன்றியது. களமிறங்கிய சைமண்ட்ஸ், ஹெய்டனுடன் ஜோடி சேர்ந்து இந்திய பந்து வீச்சை கலகலக்க வைத்தார். சேவாக் ஒரு ஓவரில் 20 ரன்கள் கொடுத்தார்! ஆறு ஓவர்களில், ஜோடி சேர்ந்து அவர்கள் எடுத்தது 66 ரன்கள், ஸ்கோர் 134-2 (14.3 ஓவர்கள்). ஆஸ்திரேலியாவுக்கு 8 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில், எனக்கு சுத்தமாக நம்பிக்கை போய் விட்டது! ஆனாலும் நம் அணியினர் நம்பிக்கையுடன் காணப்பட்டது ஆறுதலாக இருந்தது!

இடம் மாறினாலாவது விக்கெட் விழுகிறதா பார்க்கலாம் என்று நான் நாற்காலியிருந்து எழுந்து சோபாவில் அமர்ந்து கொண்டேன் :) ஸ்ரீசாந்தின் அந்த 15வது ஓவரின் நான்காவது பந்தில், ஹெய்டன் க்ளீன் போல்ட் !!! டர்பன் ரசிகர்களின் ஆரவாரம்! அந்த முக்கியமான கட்டத்தில், ஸ்ரீசாந்தை பந்து வீச அழைத்த தோனியை நிச்சயம் பாராட்ட வேண்டும்!

நமது அணியினரின் உடல் மொழியில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது! இந்த கட்டத்தில், பதானும், ஹர்பஜனும் நன்றாகவே பந்து வீசிக் கொண்டிருந்தனர். ஆட்டத்தின் 17-வது ஓவரில் பதானின் பந்து வீச்சில் சைமண்ட்ஸ் க்ளீன் போல்ட்! ஸ்கோர் 156-4 (16.4 ஓவர்கள்). தேவையான ரன் ரேட் 9.9. இன்னும் எனக்கு நம்பிக்கை இல்லை! ஏனெனில், ஆஸ்திரேலியர்கள் பிரஷரில் ஆடி, பல முறை வென்றவர்கள் அல்லவா ?

ஹர்பஜன் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் (யார்க்கர்) கிளார்க் ஸ்டம்பை இழந்தார்! 159-5 ! அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, ரசிகர்களின் டென்ஷன் எகிறிக் கொண்டிருந்தது! RP சிங் வீசிய 19வது ஓவர், ஆஸ்திரேலியர்களையும் பிரஷர் பாதிக்கும் என்பதை உணர்த்தியது :) ஆட்டத்தின் கடைசி ஓவரில், ஆஸ்திரேலியாவுக்கு தேவை 22 ரன்கள். மிக மோசமாக பந்து வீசினாலொழிய, இந்தியா தோற்க வாய்ப்பே இல்லை!

ஸ்ரீசாந்த், RP சிங், பதான் என்று அனைவருமே தங்கள் ஓவர்களை முடித்து விட்ட நிலையில், 23 வயதான ஜோகிந்தர் பந்து வீசத் தயாரானார். மிக மிக சிறப்பாக பந்து வீசி, இரண்டு விக்கெட்டுகளையும் (மைக்கேல் ஹஸ்ஸி, லீ) வீழ்த்தி, அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தந்ததில், இந்தியா 15 ரன்களில், வலிமை மிக்க ஆஸ்திரேலிய அணியை வென்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது :)

இந்திய-பாக் அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில், Law of Averages நம்மைத் தீண்டி விடுமோ என்ற அச்சம் இருப்பினும், இந்த உலகக் கோப்பையில் (வென்றே ஆக வேண்டிய சூழலில்!) 3 பெரு வெற்றிகளை ஈட்டி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இவ்விளைய பாரதத்தினரை அவ்வளவு சுலபமாக யாரும் வெற்றிக் கொள்ள இயலாது என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது!

Come Home with the T20 World Cup, Team India ! We have confidence in your fearless attitude and abilities :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 362 ***

361. எங்கே கடவுள் ? - கி அ அ அனானி

கி அ அ அனானியிடமிருந்து மற்றும் ஒரு இடுகை

உங்கள் பார்வைக்கு...

எ அ பாலா
**************************************************************

ஆபரேசன் தியேட்டரை விட்டு வெலியே வந்த டாக்டரைப் பார்த்துக் கேட்டாள் " டாக்டர் ...என் பையன் எப்படி இருக்கிறான்?பூரணமாக குணமாகி விடுவான் இல்லையா? இப்போது நான் அவனைப் பார்க்கலாமா"

"சாரிம்மா..நாங்கள் எவ்வளவோ முயன்றும்.." டாக்டர் மீதியை சொல்லாமலே உதட்டைக் கடித்து அவளது தோளை ஆதரவாக தட்டினார்.

அவளுக்கு உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்தது.." டாக்டர்..டாக்டர்...என் குழந்தைக்கு ஏன் இது மாதிரி...குழந்தைகளுக்கு ஏன் இது போல் புற்றுநோய்?"கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் மளுக்கென்று கரையுடைத்தது.

மனம் அரற்றியது " கடவுளே..கடவுளே..கை விட்டு விட்டாயே? எங்கே இருந்தாய்? என் மகனுக்கு மிகவும் தேவையான போது ஏன் வரவில்லை?".துக்கம் கேவலாக வெளி வந்தது

டாக்டர் "உள்ளே போய் மகனைப் பார்க்கிறீர்களா?மே பீ அவனுடன் சிறிது நேரம் தனியாக இருக்க ஆசைப்படுவீர்கள்.உள்ளே ஒரு நர்ஸ் இருக்கிறார்.அவர் வந்ததும் நீங்கள் உள்ளே போகலாம்..அப்புறம் சிறிது நேரத்தில் அவனது உடலை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எடுத்துப் போய் விடுவார்கள்"ஆதரவாக தோளைத் தட்டி விட்டு தலை குனிந்தவாறு நடந்தார்.

தட்டுத் தடுமாறி மகனை வைத்திருந்த அறைக்குள் நுழைந்தாள்.வெளிச்செல்ல முயன்ற நர்ஸை கையைப் பிடித்து நிறுத்தினாள்.சோகத்தில் தள்ளாடியவளை நர்ஸ் ஆதரவுடன் பிடித்துக் கொண்டு மகனை கிடத்தியிருந்த படுக்கையின் அருகில் அழைத்துச் சென்றாள்.மகனைப் பார்க்கும் போது உலகத்தின் மொத்த சோகமும் பந்தாகத் திரண்டு வந்து நெஞ்சை அடைப்பது போல் இருந்தது.மெதுவாக மகனுடைய கற்றையான தலை முடியை மெல்ல வருடினாள்.அழுத்தினால் வலித்து விடுமோ என்பது போல மெதுவாக கோதியபடி இருந்தாள்.

"வேணுமானால் ஒரு கற்றை முடியை எடுத்துத் தரவா அம்மா...மகனின் ஞாபகார்த்தமாக" மெல்லிய குரலில் நர்ஸ் கேட்டாள்

"சரி" என்றவளிடம் நர்ஸ் ஒரு கற்றை முடியை மெதுவாக வெட்டி ப்ளாஸ்டிக் பையிலிட்டு கொடுத்தாள்.

அதை வாங்கும் போது அந்தத் தாய் " இவன்தான் தன்னுடைய உடம்பை மருத்துவக் கல்லூரிக்கு தானமளிக்க வேண்டும் என பிடிவாதமாக சொன்னான்.நான் முதலில் மறுத்தேன்.ஆனால் அவனோ விடாப்பிடியாக ..அம்மா நான் இறந்த பிறகு இந்த உடம்பை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்? ஒரு வேளை இது வேறு யாராவது ஒரு சிறுவன் தன் தாயுடன் மேலும் சில காலம் இருக்க உதவலாமே" என்ற போது என்னால் மறுக்க முடியவில்லை" என்றாள்." இவன் மனசு பூராவும் தங்கம்...எந்த நேரத்திலும் அடுத்தவர் பற்றி நினைப்புதான்.அடுத்தவருக்கு உதவுவது பற்றிதான் சதா சர்வ காலமும் சிந்தனை"

" கடவுளே..கடவுளே..இப்படிப் பட்ட நல்ல குழந்தையை கை விட்டு விட்டாயே? எங்கே இருந்தாய்? என் மகனுக்கு மிகவும் தேவையான போது ஏன் வரவில்லை?" மீண்டும் மனது அரற்றியது.

மெதுவாக அந்தக் குழந்தைகள் மருத்துவமனை விட்டு வெளியே வந்தவள், கடந்த ஆறு மாதங்களாக அவளுக்கும் அவள் மகனுக்கும் வீடாகவே மாறி விட்ட ஆஸ்பத்திரியை கடைசி முறையாக திரும்பப் பார்த்தாள்.

ஆஸ்பத்திரியில் தந்த மகனது உடமைகளையும், தலை முடி அடங்கிய பையையும் காரில் தன் பக்கத்தில் வைத்தாள்.வீட்டை அடைந்த போது ஒரு யுகமே கழிந்தது போல் இருந்தது. மகனில்லாத வீட்டின் வெறுமை அவளை முகத்தில் அறைந்தது.மெதுவே கையில் மகனுடைய உடமைகளுடன் அவனது அறைக்குள் நுழைந்தாள். அவனது விளையாட்டு பொருட்கள்,மாடல் கார் அனைத்தையும் அவன் வைக்கும் அந்தந்த இடங்களில் வைத்தாள்.

அவனது படுக்கையில் சரிந்து அவன் தலையணையை அவனே போல் நினைத்து அணைத்த படி அடைத்து வைத்திருந்த துக்கமெல்லாம் பொங்கி வர நெஞ்சே வெடித்து விடும் போல் அழுதாள்.அழுதழுது எப்போது தூங்கினோம் என்று தெரியாமலே தூங்கிவிட்டாள்.

கிட்டத்தட்ட ஏதோ குளிர் காற்று உடலை வருடுவது போல் ஒரு சிலிர்ப்பு தோன்ற படக்கென விழிப்பு வந்தது.அப்போது படுக்கையில் அவளருகே நான்காக மடிக்கப்பட்ட ஒரு கடிதம் மெல்லிய காற்றில் பட படத்துக் கொண்டிருந்தது.

எடுத்துப் படிக்கலானாள்

" அன்புள்ள அம்மா,

என்னை இழந்து மிகவும் தவிப்பாய் என்று தெரியும்.நான் உன் அருகில் இல்லாததால் உன்னை மறந்து விடுவேன் என்றோ உன்னிடம் அன்பு செலுத்துவதை நிறுத்தி விடுவேன் என்றோ ஒரு போதும் நினைக்காதே.நான் எப்போதும் உன்னிடம் அன்பு செலுத்திய வண்ணமே இருப்பேன் .நாட்கள் செல்லச் செல்ல உன் மீது அன்பு கூடுமே தவிர குறையாது.வாழ்வின் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவதொரு கணத்தில் நாம் மறுபடி சந்திப்போம்.அது வரை...பொருத்திரு..வேண்டுமெனில் அன்பு செலுத்த ஒரு பிள்ளையை தத்தெடுத்துக் கொள்.நீ தனிமைத் துயரிலிருந்தும் மீளலாம்.என்னுடைய இடத்தில் நீ வேறு ஒருவனை மகனாக வரிந்து அன்பு காட்டுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.மாறாக எனக்கு மிகவும் மகிழ்சியே.நீ அவனுக்கு என்னுடைய அறையையே கொடுக்கலாம்.என்னுடைய பரிசுப் பொருட்கள் விளையாட்டு சாமான்கள் , சைக்கிள், உடைகள் அத்தனையும் தரலாம்.ஆனால் நீ ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தால்..ஒரு வேளை அவளுக்கு பையன்களாகிய நாங்கள் உபயோகிக்கும் விளையாட்டு பொருட்கள் போன்றவை பிடிக்காமல் போகலாம்..ஏனெனில் பெண்ணல்லவா.அப்படிப்பட்ட பட்சத்தில் அவளுக்கு நீ அனைத்தும் புதிதாக வாங்கிக் கொடு...பொம்மைகள் முதற்கொண்டு..சரியா?

அப்புறம் என்னைப் பற்றியே நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டிருக்காதே.நான் இப்போது இருக்கும் இடம் மிக நன்றாக இருக்கிறது.தாத்தா பாட்டி அனைவரையும் பார்த்தேன்.அவர்கள் எனக்கு இங்கு சில இடங்களை சுற்றிக் காட்டினார்கள்.ஆனாலும் பார்க்க நிறைய இடம் இருக்கிறது..அம்மா இது மிகப் பரந்த இடம்.முழுவதும் பார்க்க நிறைய நேரமாகும்.இந்த இடத்தில் அங்கும் இங்குமாக பறக்கும் தேவதைகள் மிகவும் அழகாய் இருக்கிறார்கள்.

அம்மா !ஒன்று தெரியுமா? கடவுள் நாம் பார்க்கும் எந்தப் படத்தினைப் போலவோ அல்லது நாம் நினைப்பது போலவோ இல்லவே இல்லை.ஆனாலும் அவரைப் பார்த்த கணத்தில் "அவர்தான் கடவுள்" என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.நான் ரொம்ப முக்கியமானவன் போல என்னைத் தன்னருகே அழைத்து அமர்த்திக் கொண்டார்.அவரருகில் அமர்ந்து பேசும் போதுதான், உன்னை கடைசியாய் பார்க்க முடியாமல் போனதால் விடை பெறவாவது உனக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற என்னுடைய ஆசையை அவரிடம் சொன்னேன்.நடக்கக் கூடிய காரியமல்ல என்று அறிந்தே ஒரு தாபத்தில் அவரிடம் கேட்டேன்..என்ன ஆச்சரியம்..சில தாள்களைக் கையில் கொடுத்து தான் உபயோகிக்கும் எழுது கோலையே என்னிடம் கொடுத்து எழுதச் சொன்னார்.அனேகமாக வசந்தத்தின் தேவதையைத்தான் இந்தக் கடிதத்தை உன்னிடம் கொண்டு சேர்க்க அனுப்புவார் என்று நினைக்கிறேன். அம்மா...ஒரு விஷயம்..நீ கேட்ட ஒரு கேள்விக்கும் பதிலை உனக்கு மறக்காமல் எழுதச்சொல்லி என்னிடம் சொன்னார். நீ அவரைக் கேட்டாயாமே "" கடவுளே..கடவுளே..இப்படிப் பட்ட நல்ல குழந்தையை கை விட்டு விட்டாயே? எங்கே இருந்தாய்? என் மகனுக்கு மிகவும் தேவையான போது ஏன் வரவில்லை?" என்று.

கடவுள் சொன்னார் " என் புதல்வனை சிலுவையில் அறையும் போது எங்கிருந்தேனோ அங்கேதான் இருந்தேன்" என்று.ஆம்.அவர் எப்போதும் போல் உலகின் எல்லாக் குழந்தைகளுக்கும் அருகில்தான் இருந்தாராம்."அப்புறம் இந்தக் கடிதத்தை நீ மட்டும்தான் படிக்க முடியும்.மற்றவருக்கு இது வெற்றுத் தாளாகத்தான் தெரியும் . சரியம்மா..கடவுளிடம் எழுதுகோலை திரும்பத் தர வேண்டும்.வாழ்க்கைப் புத்தகத்தில் இன்னும் சில புது அத்தியாயங்களை அவர் எழுத வேண்டுமாம். அடடா சொல்ல மறந்தே போனேனே..இப்போதெல்லாம் எனக்கு வலியே இல்லை.எனது புற்று நோயெல்லாம் போயே போய் விட்டது.எனக்கு இப்போதுதான் மிக மிக சந்தோஷம்.ஏனென்றால் நோயினால் எனக்கிருந்த அந்த வேதனையையும் வலியையும் என்னால் தாங்கவே முடியவில்லை.தன் குழந்தையாகிய நான் வேதனைப் படுவதை பார்த்திருந்த கடவுளாலும் பொறுக்க முடியவில்லையாம்..அந்தக் கணத்தில்தான் அவர் கருணை தேவதையை அனுப்பி என்னை தன்னிடம் கூட்டி வரும்படி சொல்லிவிட்டாராம். போகும் வழியில் கருணை தேவதை சொல்லிற்று" இப்படி எப்போதாவதுதான் நடக்கும்...நீ கடவுளுக்கு மிக நெருக்கமானவன்" என்று.
அம்மா இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?
அன்புடன்
(கையொப்பம்)
உன் மகன் மற்றும் கடவுள்

பின் குறிப்பு

சிலுவயில் அறையப்பட்ட போது ஏசு சொன்னதாக சொல்லப்படும் ஹீப்ரூ வரிகள்."ஏலி..ஏலி லாமா சபக்தனி"(கடவுளே.. கடவுளே நீங்களுமா என்னைக் கை விட்டீர்)

Quote
" உன்னால் ஒன்றும் செய்ய முடியாது போகும் போது கடவுள் உனக்காக நிச்சயம் ஏதாவது செய்கிறார் "

கி அ அ அனானி.

*************************************************************************************
*361*

360. விரும்பத் தக்கவரா இராமர் ?

ராமர் இஞ்சினியரிங் படித்திராவிட்டாலும், அவர் ராமர் சேது கட்டியிருக்காவிட்டாலும், அவர் சோமபானம் அருந்தியிருந்தாலும் (அவர் அருந்தவில்லை என்பது வேறு விஷயம்! சுக்ரீவன் அடிக்கடி சோமபானம் அருந்தி வந்ததை அவர் கடிந்திருக்கிறார் என்று தான் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது!) அவரை விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன அல்லவா ?

1. இராமர் ஏகபத்தினி விரதர்!

2. தந்தை தந்த வரத்திற்காக, விருப்பத்துடன் மணிமுடியைத் துறந்து வனவாழ்வை மேற்கொண்டவர், அதாவது 'நாற்காலி' ஆசை துளியும் அற்றவர்!

3. சாமானியர்கள் (குகன், சபரி, அகலிகை, சுக்ரீவன் ...) பேரில் உண்மையான அன்பும், அக்கறையும் கொண்ட மாமனிதர்.

4. தனக்காக உயிரையும் தரவல்ல நட்பையும், சுற்றத்தையும் (ஜடாயு, அனுமன், இலக்குவன், பரதன் ...) தனது மேன்மையால் கிடைக்கப் பெற்றவர்.

5. (கொழுக்கட்டையோ கூழோ என்ற பேதம் பார்க்காமல்) குகன் தந்த மீனையும், தேனையும் ஒன்றாக பாவித்து ஏற்றுக் கொண்டவர்!

6. தன் மனைவியை அபகரித்த எதிரி போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்கையில், "இன்று போய் நாளை வா" என்று பெருந்தன்மையோடு கூறிய நல்ல மனிதர்.

7. லவன், குசன் என்ற உலகம் வியந்த மைந்தர்களின் தந்தை!

8. வெற்றுப்பேச்சு பேசி பொழுதைக் கழிக்காமல், தன் செயல்களால் (ராம ராஜ்யம் அமைத்து!) தன் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு வித்திட்டவர்.

9. தன் குடும்பத்தினரையும், பொதுமக்களையும் ஒன்று போல் பாவித்தவர்!

10. பொய்யுரைக்காதவர், சந்தர்ப்பவாதம் அறியாதவர். நேர்மையாளராக வாழ்ந்து இன்றும் மக்களின் மனதில் அவதார நாயகனாக வாழ்பவர்!

11. தன்னை வெறுத்த சிற்றன்னை மீதும் அன்பு செலுத்தி, அரவணைத்துக் கொண்டவர்.

இன்னும் எவ்வளவோ சொல்லலாம் தான்! புரிந்தவர்களுக்கு நிச்சயம் புரியும், புரியாதவர்களுக்கு (புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு!) என்ன சொல்லியும் புரியப் போவதில்லை! அதனால், யாருக்கும் எந்த நட்டமும் இல்லை :)

*** 360 ***

359. 'அகிம்சை' குறித்து கி.அ.அ.அனானி !

திடீரென்று நண்பர் கி.அ.அ.அனானி, அகிம்சை பற்றி ஒரு மேட்டர் எழுதி மெயிலில் அனுப்பியிருந்தார் (அவர் காந்தியின் ரசிகர் என்ற விஷயம் இப்போது தான் தெரிய வந்தது ;-)) கி.அ.அ.அ எழுதி நான் பதிப்பித்ததில், என் மனதைத் தொட்ட மேட்டர் இது தான் ! மேட்டர் பதிவாக கீழே.

எ.அ.பாலா
***************************
எனக்கு அப்போது 16 வயது. எனது பெற்றோருடன் தென் ஆப்ரிக்கா, டர்பன் நகருக்கு வெளியே 18 மைல் தொலைவில் கரும்புத் தோட்டங்களுக்கு நடுவில் வசித்து வந்தோம்.நாங்கள் இருந்த இடம் நகருக்கு வெகுதொலைவிலும் அக்கம் பக்கம் யாரும் இல்லாமல் தனித்தும் இருந்ததால், நானும் என் இரு சகோதரிகளும் , எப்போதாவது கிடைக்கும் நகரத்திற்கு போகும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம். நகரப் பரபரப்பில் நண்பர்களுடன் மற்றும் திரையரங்குகளில் மகிழ்ச்சியாக சில மணிகளைக் கழிக்கலாம் என்று.

ஒரு நாள் என் தந்தையார் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள நகரத்திற்கு கிளம்பிய போது அவருக்கு கார் ஓட்டியாக வரும்படி என்னைப் பணித்தார்.அது நாள் முழுவதும் நடக்கக் கூடிய கருத்தரங்கம்.நான் அளவு கடந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்.ஒரு நாள் முழுவதும் டவுனில்..நண்பர்களுடன் ...என மகிழ்சிக்கு அளவே இல்லை. என் தாயார் நகரிலிருந்து வாங்கி வர வேண்டிய மளிகைச் சாமான்களின் பட்டியலை கொடுத்தார்.தந்தையார் காரை சர்வீஸுக்கு விடுவது உட்பட மேலும் முடிக்க வேண்டிய சில சிறு சிறு அலுவல்களையும் சொன்னார்.

தந்தையாரை கருத்தரங்கில் விட்ட போது " மாலை இதே இடத்தில் 5.00 மணிக்கு சந்திக்கலாம்.வீட்டிற்கு சேர்ந்தே திரும்பச் செல்லலாம் " எனக் கூறினார்

எனக்கு பெற்றோர் தந்த வேலைகளை அவசரமாக முடித்துக் கொண்டு, நேராக பக்கத்திலிருந்த சினிமா தியேட்டருக்குள் நுழைந்தேன். படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை.கடிகாரத்தைப் பார்த்தால் மணி 5.30. அவசர அவசராம காராஜுக்கு சென்று காரை பெற்றுக் கொண்டு ,தந்தையார் குறிப்பிட்டிருந்த இடத்தை அடைந்த போது மணி 6.00

தந்தையார் சற்றே கவலை தோய்ந்த முகத்துடன் " ஏன் லேட்" என்று கேட்டார். சினிமா பார்த்துக் கொண்டு உட்கார்ந்ததில் நேரம் போனது தெரியவில்லை என சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு" கார் சர்வீஸ் செய்ய நேரமாகி விட்டது" என பொய் சொன்னேன்.அதைச் சொன்ன மறுகணமே எனது மடத்தனத்தை உணர்ந்தேன். தந்தையார் ஏற்கனவே காராஜில் போன் செய்து கேட்டிருப்பார் . என் பொய் ஒரே நிமிடத்தில் சாயம் வெளுத்தது.நான் அச்சத்துடன் தந்தையாரை ஏறிட்டேன்.அவர் என்னைப் பார்த்து பின்வருமாரு சொன்னார் " நான் உன்னை வளர்த்த விதத்தில் ஏதோ குறை இருக்கிறது.அதுதான் என்னிடம் உண்மையை தைரியமாகச் சொல்லும் தன்னம்பிக்கையை உனக்கு தரவில்லை.நான் உன்னை வளர்ப்பதில் எங்கு தவறிழைத்தேன் என்பதைப் பற்றி சிந்தித்து என்னை திருத்திக் கொள்வதற்காக...நான் வீடுவரை உள்ள 18 மைல்களும் இதைப் பற்றி யோசித்தவாரே நடக்கப் போகிறேன்"

இவ்வாறாக கூறியதுடன் நில்லாது , கோட்டு சூட்டுடன், கரடு முரடான கிராமத்து இருட்டு சாலையில் நடக்க ஆரம்பித்தார்.என்னால் அவரை விட்டு சொல்லவும் முடியவில்லை.எனவே அடுத்த ஐந்தரை மணி நேரம், நான் சொன்ன ஒரு சிறு முட்டாள்தனமான பொய்யால் தந்தையார் படும் மன வேதனையும், கரடு முரடான நீண்ட சாலையில் நடந்து என்னால் அவர் படும் உடல் வேதனையும் பார்த்துப் பார்த்து நொந்து கொண்டே அவரது பின்னாலேயே காரை மெதுவாக செலுத்திக் கொண்டே சென்றேன்.அந்தக் கணத்தில் நான் முடிவெடுத்தேன் " வாழ்க்கையில் நான் எப்போதும் பொய் சொல்லக் கூடாதென்று"

பின்னாளில் நான் இதைப் பற்றி பலமுறை சிந்திதது ஆச்சரியப் பட்டதுண்டு.அன்று எனது தந்தையார் என்னை சாதரணமாக கடிந்து கொண்டோ,திட்டியோ ,ஏன் அடித்தோ போன்ற நாம் நமது குழந்தைகளிடம் பின்பற்றும் ஏதாவது ஒரு முறையில் தண்டித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று. நான் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாமல் கற்ற அந்தப் பாடத்தை கற்றிருப்பேனா? கண்டிப்பாக மாட்டேன். நானும் அவர் தந்த தண்டனையை ஏற்று, மறந்து, மறுபடியும் அதே தவறை மீண்டும் செய்திருப்பேன். ஆனால் அஹிம்சை வழியில் என் தந்தை செய்த செயலானது, இன்னும் இச்சம்பவம் நேற்றுதான் நடந்தது போல் என் நினைவில் பசுமையாய்ப் பதிந்து ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதுதான் அஹிம்சையின் சக்தி"
*******************************************************************************
"மஹாத்மா காந்தியின் பேரனும்,காந்தி அஹிம்சா பல்கலைக் கழக நிருவனருமான டாக்டர்.அருண் காந்தி , போர்டோ ரிகோ பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையின் போது , அஹிம்சை வழியில் பிள்ளை வளர்ப்பு பற்றி உதாரணமாக குறிப்பிட்ட ஒரு வாழ்க்கை சம்பவம் இது."

கி அ அ அனானியின் குறிப்பு கீழே

இப்படிப்பட்ட "அஹிம்சை" என்ற சக்தி மிகுந்த ஆயுதத்தை ஒரு தேசத்தினையே விடுதலை அடையச் செய்ய உபயோகிக்க முடியும் என்று சொல்லி அவ்வழியில் நின்றதோடல்லாமல், மக்களை வழி நடத்தி , சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்து நிரூபித்த அந்த மஹான், அண்ணல் , மஹாத்மா காந்தியடிகள் பற்றி அங்கங்கு கேட்டது படித்தது வைத்தெல்லாம் கண்ட படி ஏதோ வாய்க்கு வந்தபடி பேசுவது அல்லது எழுதுவதெல்லாம் குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்துச் சொன்னது போலத்தான்.

முடிக்கும் முன்

2000 -ஆம் ஆண்டு பி பி சி செய்திகள் வலைத்தளத்தினால் நடத்தப் பட்ட வாசகர்கள் மில்லினியம் வாக்கெடுப்பில் " கடந்த 1000 வருடங்களில் தோன்றிய மனிதர்களிலேயே உன்னதமானவர் என்று தேர்ந்தெடுக்கப் பட்டவர் " மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி "

அந்த மஹான் தோன்றிய மண்னில் நாமும் தோன்றியதை எண்ணி பெருமை கொள்வோம்..அவர் பற்றி மென்மேலும் படித்துணர்வோம்.

வாழ்க மஹாத்மா காந்தி...வளர்க அவர்தம் ஒப்பிலா அஹிம்சை தத்துவங்கள்...ஜெய் ஹிந்த்

கி அ அ அனானி

*** 359 ***




Saturday, September 22, 2007

சரத்குமார் = Common sense

நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்(!) சரத்குமார் நேற்று ஒரு பேட்டியில் முதல்வர் கருணாநிதி ராமரை அவதூறு பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் அல்லது ராமரை வழிபடும் பக்தர்கள் இனி திமுக வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று உறுதிபடக் கூற வேண்டும் என்று ஒரு சூப்பர் ஷாட் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது!

மேலும் அவர், "பல கோடி பக்தர்களின் மனதை புண்படுத்தி விட்டு, பின் அவர்களிடமே தேர்தலின்போது வாக்குக்கு கையேந்துவது சரியல்ல! மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ராமர் குறித்து முதல்வர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களால், அவர் IPC பிரிவு 295A மற்றும் 290 வாயிலாக தண்டனை பெற வாய்ப்புள்ளது. அத்வானியுடன் ராமர் குறித்த விவாதத்திற்குத் தயார் என்று அறைகூவல் விடும் முதல்வர் முதலில் தனது பதவியை ராஜினாமா செய்தால் தான், நியாயமான விவாதம் நடைபெற வழி பிறக்கும்! நம் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதில் கவனம் செலுத்துவதை விடுத்து, இது போன்று உள்நோக்கத்துடனான, தேவையற்ற, பெரும்பான்மை இந்து மக்களை வேதனைக்குள்ளாக்கும் கருத்துக்களை பேசி, முதல்வர் தனது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்." என்று சரத் மேலும் கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு மாற்றுப்பாதை அமைக்க முடியுமானால், அது குறித்து ஆராய்வதில் தவறொன்றுமில்லை என்றும், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அளவுகோல்களில், ராமர் சேதுவை உடைத்து அமைக்கும் கடல் பாதை தான் ஏற்றது என்ற வாதத்திற்கு வலு சேர்க்கும் கருத்துக்களை முன் வைக்க வேண்டியது அரசின் கடமை என்றும் சரத் கூறியுள்ளார்.

சரத் தனது பேட்டியில் பிஜேபியையும் ஒரு வாங்கு வாங்கியுள்ளார்! திட்டம் தொடங்கி 18 மாதங்களுக்குப் பின் அரசியல் ஆதாயத்திற்காக, பிஜேபி இப்பிரச்சினையை கையில் எடுத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்! பிஜேபி விரித்த வலையில் தி.மு.க விழுந்து விட்டது என்றும், திரு.அத்வானி மற்றும் திரு.கருணாநிதி ஆகிய இருவருமே கண்டனத்துக்குரியவர்கள் என்றும் சரத் பொரிந்துள்ளார்.

தமிழர்களின் 150 ஆண்டுக் கனவான சேது சமுத்திரத் திட்டத்தின் நோக்கம் அரசியல்-மத சர்ச்சைகளினால் திசை திருப்பப்படாமல், திட்டம் சுமுகமான முறையில் நிறைவேற்றப்பட்டால், தென் மாவட்டங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழி பிறக்க நல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இறுதியாக, அடுத்த மாதம் ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று கணித்த சரத், திமுக அரசு, இலவசத் திட்டங்கள் தவிர்த்து வேறெதையும் தனது சாதனைகளாகக் கூற இயலாத நிலையில் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்!

நன்றி: டெக்கான் குரோனிக்கள்

*** 358 ***

Friday, September 21, 2007

கில்லாடி ரோஹித்+மாவீரன் R.P.சிங் = A scintillating Indian Victory

நேற்று நடந்த இந்திய-தென்னாபிரிக்கா ஒரு நாள் பந்தயத்தில் (அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கு) இந்தியா வென்றே ஆக வேண்டிய சூழல் (as usual) ! என்ன, இம்முறை, இவ்வளவு ஓவர்களில் வென்றாக வேண்டும் என்றோ, இத்தனை ரன் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்றோ extra கவலைகள் இல்லை:)

சமீபத்தில், தொடர்ந்து T-20 கிரிக்கெட் ஆட்டங்களை டிவியில் பார்த்து வருவதால், கண்களில் எரிச்சல் இருந்தாலும், எப்போதும் போல் அடியேன் இரவு 9 மணிக்கு டிவி முன்பு (25 வருட வியாதியான, ஒரு வித எதிர்பார்ப்பு மற்றும் டென்ஷனோடு) ஆஜர் ஆனேன்!  டாஸில் வென்ற தோனி,  பேட்டிங் செய்ய முடிவெடுத்தது சற்று ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், ஆடுகளம் (pitch) புதிதாக அமைக்கப்பட்ட ஒன்று,  இந்தியாவுக்குப் பிடிக்காத பச்சை நிறத்தில் (grassy) காணப்பட்டது ;-)  ஆனால், தோனி கூறிய (ரன் இலக்கை துரத்துவதில் உள்ள அழுத்தத்தை சமாளிப்பதை விட ஒரு இலக்கை நிர்ணயிப்பது சாலச் சிறந்தது என்ற) காரணம் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே தோன்றியது. 

சேவாக், கம்பீர் களமிறங்கினர்.  எப்போதும் போல், வேகப்பந்து வீச்சாளர் படை ஒன்றுடன் நம்பிக்கையுடன் களமிறங்கியது தெ.ஆ!   டர்பன் ஸ்டேடியம், ஆரவாரத்திலும், கொண்டாட்டங்களிலும் களை கட்டியிருந்தது.  வர்ணனைக்கு வந்த கவாஸ்கரே சற்று டென்ஷனில் தான் இருந்தார், இந்தியா ஜெயிக்க வேண்டுமே என்று !

நிதானமாக ஆடத் தொடங்கிய இந்தியா 4.4 ஓவர்களில் 32 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியாவுக்கு சனி பிடித்தது! நான்கு பந்துகளில், 3 விக்கெட்டுக்களை (கம்பீர், கார்த்திக், சேவாக்) பறி கொடுத்து, 33-3 என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.  ஆடுகளத்தில் நல்ல ஸ்விங் இருப்பது தெளிவாகப் புலப்பட்டது. ரோஹித் சர்மா (யுவராஜ் ஆட முடியாத காரணத்தால் தான் இவர் அணியில் இருந்தார்) களமிறங்கினார். அவரும் உத்தப்பாவும் ஸ்கோரை 10.3 ஓவர்களில், 61க்கு எடுத்துச் சென்றபோது, உத்தப்பா, அடிக்கப் போய், ஸ்மித் பிடித்த அபார கேட்ச் மூலம் விக்கெட்டை இழந்தார்.  (அப்போது எ.அ.பாலா கடுங்கோபத்தில், உத்தப்பாவை திட்டி விட்டார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்:))

பின்னர் வந்த தோனியும், ரோஹித்தும் மனம் தளராமல் (ஒரு challenging இலக்கை எப்படியாவது நிர்ணயிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன்!) ஜோடி சேர்ந்து ஆடி, 9.1 ஓவர்களில் 85 ரன்கள் சேர்த்தனர். சர்வதேச அனுபவம் இல்லாத ரோஹித், கடினமான ஒரு சூழலில் (33-3) வந்து, பந்து அலைபாயும் ஆடுகளத்தில், மிகச் சிறப்பாக ஆடியதை இங்கே குறிப்பிட வேண்டும்.  ரோஹித்திடம் நல்ல டெம்பர்மெண்ட்டும், திறமையான ஷாட் செலக்க்ஷனும் காணப்பட்டது.  இவர் கடைசிப் பந்தில் அடித்த, வீரமான ஸிக்ஸரால், இந்தியா 150-ஐத் தாண்டி, தெ.ஆவுக்கு 154-ஐ வெற்றி இலக்காக நிர்ணயித்தது!
*****************************************************

பந்து வீச, இந்தியா நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் களமிறங்கியதாகத் தான் எனக்குத் தோன்றியது (இல்லை, பிரமையோ, என்ன இழவோ ?).  RP சிங் தனது முதல் ஓவரில், 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி (கார்த்திக், ஸ்மித் கொடுத்த கேட்சை பிடித்தது, பிரில்லியண்ட்!), அடுத்த ஓவரில், ஸ்ரீசாந்த் டிவிலியர்ஸை LBW அவுட்டாக்கியதில், தெ.ஆ 12-3 !  ஆட்டம் சூடு பிடித்தது, என் விருப்பம் போலவே :) 

ஜஸ்டின் கெம்பும், பவுச்சரும், தட்டுத் தடுமாறி ஸ்கோரை 30க்கு இட்டு வந்தபோது, நமது பேட்டிங் ஹீரோ ரோஹித்தின் அபார முயற்சியால், கெம்ப் ரன் அவுட் ! தொடர்ந்து, RP சிங் போலக்கை (round the wicket பந்து வீசி) க்ளீன் போல்ட் செய்து பெவிலியனுக்கு அனுப்பியதில், 31-5 ( 5.5 ஓவர்கள்).  ஒரே குறை, ஸ்ரீசாந்த்தும், RP சிங்கும் பல wide பந்துகளை வீசியது தான்!  இப்போது, மிக லேசாக, இந்திய அணி ரத்த வாடையை உணர்ந்தது !  ஆனால் அந்த வாடையை என் மூக்கு உணர மறுத்தது :) 

அதன் பின், பவுச்சர், மார்க்கல் இடையே ஒரு நிதானமான பார்ட்னர்ஷிப் மலர்ந்து, ஸ்கோர் நூறை எட்டியது (16.4 ஓவர்கள்).  ஆனால், தேவையான ரன் ரேட் (16.2 ரன்களுக்கு) எகிறியிருந்தது.  நடு ஓவர்களின் போது, ரன் ரேட் எகிறியதற்கு முக்கியக் காரணம் இர்பான் பதானின் திறமையான பந்து வீச்சு (4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தார்!).  ஜோகிந்தரும் நன்றாகவே பந்து வீசினார்.  அந்த நிலையில், தெ.ஆ ஒழுங்காக, அரை இறுதிச்சுற்றுத் தகுதிக்குத் தேவையான இலக்கை (126 ரன்கள்) முன் வைத்து ஆடியிருக்க வேண்டும்! 

ஆனால் நம் அணியினரோ, தெ.ஆ வை மொத்தமாக வூட்டுக்கு அனுப்புவதில் குறியாக இருந்தனர் போலும்!  விதி வேறு சதி செய்தது! ஸ்ரீசாந்த்தின் வெளி செல்லும் பந்தை, ஸ்டம்ப்புக்கு இழுத்து, பவுச்சர் போல்ட்!!!  100-6.  இப்போது டிவியில் பார்த்துக் கொண்டிருந்தே எனக்கே தெளிவாக ரத்த வாடை அடித்தது (நான் அதிகமாக national geography, Animal planet சேனல்கள் பார்ப்பதால் இருக்குமோ ?) !

நமது டர்பனேட்டர் ஹர்பஜன், தனது முழுத்திறமையை காட்டி பந்து வீசிக் கொண்டிருந்தார்! 103-இல், பிலாண்டர் ஸ்டம்ப் அவுட் ஆனதில், 103-7.  RP சிங்கின் (19வது) ஓவரில், தெ.ஆ வின் கடைசி நம்பிக்கையான மார்க்கலின் ஸ்டம்ப் சிதற அடிக்கப்பட்டதில், 109-8.   களத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தெ.ஆ அணியினர் பேயறைந்தது போல் காணப்பட்டனர்.  தெ.ஆ ரசிகர்கள், நடப்பது கனவா நனவா என்ற நம்பிக்கை இல்லாமல் பேச்சு மூச்சு இன்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.   ஸ்டேடியத்தில் இருந்த டர்பன் வாழ் இந்திய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஆரவாரித்த வண்ணம் இருந்தனர்.

இறுதியாக, (இதுவரை நடந்த எல்லா ஆட்டங்களிலும் வென்ற) தெ.ஆ 20 ஓவர்களில் 116-9 என்ற நிலையில், அரை இறுதிச் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் தோற்றுப் போனது சோகமே!  இந்தியா நேற்று டர்பனில் அடித்த கூத்தில், 'பின்புற வாசல்' வழியாக நியூஜிலாந்து அரை இறுதிச்சுற்றில் நுழைந்து விட்டது :)   தெ.ஆ வை கலகலக்க வைத்து, மண்ணைக் கவ்வ வைத்ததில், RP சிங்குக்கு பெரும்பங்கு உண்டு (4-0-13-4).   இளம் இந்தியா வாழ்க, வளர்க !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 357 ***

Monday, September 17, 2007

திருந்துவோமா நாம் ? - மீண்டும் கி அ அ அனானி

நேற்றே கி அ அ அனானியிடம் இருந்து கீழ்கண்ட மேட்டர் மெயிலில் வந்திருந்தது.நேற்று முழுவதும் மெயில் பார்க்காததால் , இதையும் பார்க்கவில்லை. ஆனால் " இது பற்றி மேலும் எனது கருத்தை உங்கள் பதிவில் வெளியிட விருப்பம் இல்லை போல் தெரிகிறது,பரவாயில்லை அதனால் இதை முகமூடி பதிவிலும் பின்னூட்டமாக போட்டு விட்டேன்" என கடுப்பாகி இன்று மெயில் போட்டிருந்தார். :-)

ஏற்கனவே கி அ அ அனானியின் கொ ப செ ஆக ஆக்கப்பட்டு விட்ட படியாலும், கருத்து சுதந்திரத்தின் மேல் உள்ள தீவிர நம்பிக்கையாலும் கி அ அ அனானி அனுப்பிய மேட்டர் பதிவாக கீழே..:))) என்சாய்..:)))

எ.அ.பாலா

*****************************************************************************

தொடரும் தோழரின் "கவனிப்பு"

தோழர் "வளர்மதி" என்பவர் அருமையாக சில பதிவுகள் போட்டிருக்கிறார்... அதன் சாராம்சம் கீழே...

"போலி செய்தல் அப்படீங்குற பேருல..கருத்துக்களை, முழு புரிதலும் இல்லாமல் காப்பியடித்து தனது போல் கையாளுவதை கண்டித்து எழுதியிருப்பார் போல் இருக்கிறது...அது சுகுணா திவாகர் என்ற பதிவரை சுட்டிச் சொல்வது போல் பட்டிருக்கிறது போல " சரி...இதுல ஒனக்கென்ன அங்கலாய்ப்பு என்கிறீர்களா...இல்லீங்க..யாரு போலி பண்ணினா நமக்கென்ன யாரு சுட்டிக்காட்டினா நமக்கென்ன ?ஏதோ நாமளுண்டு நம்ம பொழப்புண்டுன்னு சும்மாதாங்க இருந்தோம்.
" மேலும் வளர்மதி , சுகுனா திவாகர் மற்றும் வரவணை ரெண்டு பேரையும் படிங்கப்பா ..படிக்காம மேம் போக்கா பேசாதீங்க " என்று ஸ்கூல் மாஸ்டர் ரேஞ்சுக்கு அதட்டியிருப்பார் போல... இதுல உனக்கென்ன பிரச்சினை என்கிறீர்களா...எனக்கென்னாங்க பிரச்சினை இருக்கப் போகுது..சொம்மாதானுங்க கெடந்தோம்.

" இதுக்கு வரவணை தாஸ் காப்பிடலை காரல் மார்க்ஸ் தவிர யாரும் படிக்கவில்லை... எங்கல்ஸே ப்ரூப் ரீடிங் போதுதான் படிச்சாரு" எங்கிற ரேஞ்சுக்கு பதிவு போட்டு சின்னப்பையன் கக்கூஸ் போய்க்கினே பேப்பர் படிக்கிற படமெல்லாம் போட்டு அல்லாரும் நல்லா வாசிங்க... வாசிங்க அப்படீன்னு பதிவு போட்டாருங்க....இதுல உனக்கென்ன பிரச்சினை என்கிறீர்களா... எனக்கென்னாங்க பிரச்சினை இருக்கப் போகுது..அல்லாரும் அல்லா எடத்திலேயும் வாசிக்கிறது நல்லதுதானுங்களே.

" இதுல கடுப்பாயி வளர்மதி சொன்னாரு...சரி-தப்புன்னெல்லாம் பார்க்காம ஒரு பிரச்சினை அப்ப்டீன்னு வரும் போது இவனுங்க ரண்டு பேரும் சாதிப் புத்தியை காட்டிட்டாங்க அப்படீன்னு ரண்டு பேர் சாதி பேரெல்லாம் போட்டு "ஜாதிப் புத்தி" அப்படீன்னு எபெக்டுக்கு வடமொழி"ஜ" எல்லாம் யூஸ் பண்ணி அப்புறம் ஊருகாயாக பாப்பாரப் புத்தி, பாப்பார வேலை என்ரெல்லாம் போட்டு ஒரு பதிவு போட்டாருங்க ..இதுல உனக்கு என்னா பிரச்சினைஅப்படீங்குறீங்களா..இல்லை சாமி இதுலையும் எனக்கு ஒரு பிரச்சினையில்லை...பொத்திக்கினு தான் இருந்தோம்...இதுல காமடி இன்னான்னா இந்தப் பதிவுல இவரு சுகுணா. வரவனையை விட பாப்பானுங்களைதான் ஜாஸ்தி திட்டியிருக்கார்..ஆனா அல்லாரும் மெளனம் காத்துக்கிட்டுதான் இருந்தாங்க..ஆரும் வம்பு வலிக்கலை...

இனிமே தான் மெயின் ஸ்டோரி

" சுகுணா திவாகர்..பிரேக்கிங் பாயிண்ட்டை அடைஞ்சுட்டார் போல( இதுவும் வலையுலகில ஒருத்தர் சொன்னதுதான்)..என்னை சாதியத்துடன் தொடர்பு படுத்தி எழுதிட்டாங்க...அதுனால நான் ஒரு வெறுமயை உணர்கிறேன் அப்படீன்னு சொல்லி...வலர்மதியை பர்சனலா நாலு திட்டு திட்டி இனிமே பதிவெழுதப் போறதில்லை அப்படீன்னு " வேதனயுடன் விலகுகிரேன் " அப்படீன்னு ஒரு செப்டம்பர் பிரகடனம் பண்னினாருங்க...சரி இதுல உனக்கென்ன பிரச்சினை அப்படீங்குறீங்களா... இருக்குங்களே..முன்னால நாம போட்ட ஒரு பதிவுல கருத்தை எதிர் கொள்வதுடன் சேர்த்து எபெக்டுக்காக பதிவை வெளியிட்டவரின் ஜாதியை போட்டு புரட்னாருங்கோ இதே சுகுணா திவாகர்...அதுக்கும் இதுக்கும் என்னாங்க வித்தியாசம்...இப்பம் உங்களை சாதி சொல்லி திட்டுனதுல இம்புட்டு பீலிங்ஸாகி விட்டீர்களே அப்படீன்னு நாம கேட்டமுங்க போன பதிவுல்..
இன்னும் முகமூடி மாதிரி சில பேர் வேற வேற மாதிரி பதிவு போட்டாருங்கோ அவங்கவங்க ரேஞ்சுல.

இனிமே தான் கிளைமாக்ஸு

வளர்மதி "பார்ப்பனக் கூத்து, எச்சரிக்கை " அப்படீன்னு ஒரு டகால்பாஜி காட்டியிருக்காருங்கோ...அவரு இவங்களுக்கு மண்டையில ஒரைக்கணுமுன்னு ஜாதி பேர் சொல்லி திட்டினாராம்..அதுவும் சாதிய மனோபாவம் என்று சொல்லும்போது, செறிவான புரிதல்களோடேயே சொல்கிறேன் " அப்படீன்னு தன்னிலை விளக்கம் வேற."... சவாசு அப்படிப் போடு சவாசு

" அப்புறம் இதை சற்று 'காட்டமாக' ( அதாவது அடுத்தவன் சாதியை பற்றி திட்டி "ஜாதிப் புத்தி" என அறிவார்த்தமா எழுதிக் கொண்டிருக்கும்போதே,) சில பார்ப்பன விஷமிகள், "ஊர் ரெண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்று, இடையில் புகுந்து விளையாடத் தொடங்கிவிட்டதைக் கவனிக்க நேர்ந்து, அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணம் கொண்டு. அதனாலேயே, இதை இத்தோடு முடித்துக் கொள்ள விழைகிறாறாம்." அதாவது ரண்டே ரண்டு பேரை மட்டும் ஜாதியச் சொல்லி திட்டுனதோடு நிப்பாட்டிக்கிறாராம் " ஹொய் ஹொய்யா .. ஹய்யா...ஹொய் ஹொய்யா..திராவிடமும் மார்க்ஸியமும் இவர் தயவால் தமிழ் வலையுலகில் புனர் ஜென்மம் எடுத்து விட்டது...சரி ..இதுல உனக்கென்ன பிரச்சினை அப்படீங்குறீங்களா..அட..எனக்கென்னங்க பிரச்சினை இருக்கப் போகுது..நல்லா நடக்கட்டும்.

இனிமேதான் சூப்பர் ஷாட்டு

""இதற்கு மேலும் விஷமங்கள் தொடர்ந்தால், மற்ற தோழர்கள் 'கவனித்துக்' கொள்வார்கள் என்று நம்புகிறேன்.""" அப்படீன்னு கட்சித்தலைவர் ரேஞ்சுக்கு போய் கோடி காட்டியிருக்கிறார் இந்த கேடி(கேடிக்கு அர்த்தம் இவர் பதிவிலேயே சொல்லியிருக்காருங்க)..இதுல உனக்கென்ன பிரச்சினை அப்படீங்குரீங்களா...என்னங்கண்ணா இப்படி கேட்டுட்டீங்க....அன்ணா....அண்ணா ...என்னைய காப்பாத்துங்கண்ணா ..பயம்மா இருக்குண்ணா...வளர்மதி "தோழர்கள்" மூலமா என் தமிழ் வலையுலகுக்கான இலக்கிய சேவையை முற்றுப் பெறாமலேயே முடிவுக்கு கொண்டு வந்து விடுவாரோன்னு அஞ்சி நடுங்குறேனுங்கண்ணா....காப்பாத்துங்கண்ணா....இப்போதைக்கு பயத்துல தலை மறைவா இருக்கேனுங்கண்ணா :))

இந்த மாதிரி அரைகூவலுக்கு ஒரு பதில் மரியாதை

விவாதம் பண்ண முடியலைனா, நண்பர்களாக கருதப் பட்டவர்களையே கீழ்த்தரமாக சாதியை சொல்லி திட்டுரதும்..அதுக்கு புத்தகத்தை பொரட்டி பொரட்டி படிச்சு செஞ்சது சரிதான் அப்படீன்னு சுத்திவளச்சு வியாக்கியானம் எழுதுர ஆளு நானில்லை...அதே மாதிரி தப்புன்னு தோணிச்சுன்னா தைரியமா சொல்லுவோம்...இந்த "கவனிச்சிருவோம், கட்சி கட்டிருவோம் " டகால்பாஜியெல்லாம் வேற எங்கனாது போய் காட்டுங்க....அது சரி நீங்களெல்லாம் ஒரு கொள்கைப் பிடிப்போடு , ஒரு இயக்கத்துல இருக்கீங்களாக்கும்..போய் சொல்லுங்க...நான் ரண்டு பேரை "ஜாதிப் புத்தி" ன்னு சொல்லி திட்டுனேன் அப்படீன்னு...மெச்சி பாராட்டுவாங்க.." இதுல நீங்க கேக்குறீங்க அடுத்தவனை பார்த்து...பெரியார் உங்களுக்கு ஊறுகாயா" அப்படீன்னு..அவரு உங்களுக்கு இன்னாங்கோ...

சரி... இதெல்லாம் ஏன் எழுதுர...அல்லது ஏன் மூக்க நுழைக்கிற அப்படீன்னு கேக்குரீங்களா..( ரெண்டு பேர் கேட்டாலும் கேப்பாங்க).கத்திரிக்காயை கடையில போட்டு நாலு பேருக்கு தெரியணுமுன்னு தெரட்டி ..தொரட்டியிலெல்லாம் போட்டுதான விக்குரீங்க...சொந்த விஷயமுன்னா ஊட்டுக்குள்ள வச்சுக்குங்க...இதை வலையிலேயே ஒங்க நண்பர்கள், தோழர்கள் னு சொல்றவங்களே நெறைய பேர் பதிவும் போட்டு பின்னூட்டத்திலையும் சொல்லிட்டாங்க.... ஆனா இதெல்லாம் கேட்டுருவீங்களா நீங்க...அடுத்தவன் சொல்ற நல்ல விஷயத்தை காது கொடுத்து கேட்டாதான் எப்பமோ முன்னேறியிருப்போமே ...தூத்தேரிக்கி...

கி.அ.அ.அனானி
*********************************************************************

***356***

Saturday, September 15, 2007

355. சாக்கடைக் கொசுக்களா நாம்? --- கேட்கிறார் கி.அ.அ.அனானி!

பதிவின் தலைப்பை, சன் டிவியில் வரும் 'குங்குமம்' விளம்பரம் ஸ்டைலில், வாசிக்கவும் :)
கடந்த 3 மாதங்களாக, தமிழ் வலைப்பதிவுகள் பக்கம் அதிகம் வரவில்லை. வழமையான காரணம் --- வேலைப்பளு ! ஏதோ 2-3 பதிவுகள் போட்டிருப்பேன்.

சரி, இப்ப பதிவின் மேட்டருக்கு! நண்பர் கி.அ.அ.அனானியும் (கிராமத்து அரட்டை அரசியல் அனானி --- இவர் ஏற்கனவே சிலபல பதிவுகள் எழுதி எனக்கு அனுப்பி, அவற்றை என் வலைப்பதிவில் பதிந்திருக்கிறேன் --- இந்த விளக்கம் கி.அ.அ.அ வை மறந்து விட்டவருக்கு அல்லது அறிமுகம் இல்லாதவருக்கு ;-)) பிஸியாக இருந்திருப்பார் போல இருக்கு! திடீரென்று இன்று மெயிலில் ஒரு மேட்டரை அனுப்பி, பதிப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்! மேட்டரைப் படித்தால், தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை :)

தமிழ்மணம் பக்கம் சென்று சில பதிவுகளை வாசித்தபின் விஷயம் ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரி தோன்றியது! புரியாவிட்டாலும் பெரிய பிரச்சினை ஒன்றுமில்லை தானே!

கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையாலும், கி.அ.அ.அ வின் கொ.ப.செ ஆக ஏற்கனவே ஆகி விட்டதாலும் (அல்லது ஆக்கப்பட்டு விட்டதாலும் :)) கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் !

இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் (இதற்கு வினை-மறுவினை என்பது, T-20 வகை கிரிக்கெட் போன்றது, எனக்கு 50 ஓவர் ஆட்டம் தான் ஓரளவு விளையாட வரும், அதனால் தான் கி.அ.அ.அ வையே விளையாட அழைக்கிறேன் :)) கி.அ.அ.அ மெயில் மேட்டர் பதிவாக கீழே !

எ.அ.பாலா
***********************
அன்புள்ள சுகுணா திவாகர்,

உங்களது " வேதனையோடு விலகுகிறேன் " என்ற பதிவு பார்த்து நெகிழ்ந்து போய் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உங்களது சாதி மறுப்பு என்பது கேள்விக்கிடமில்லாததுதன்..இதை உங்களை கருத்துத் தளத்தில் எதிர்பவர்கள் கூட ஒத்துக் கொள்வார்கள்..பின்னூட்டம் வாயிலாகவாவது ...


அப்படிப்பட்ட உங்களை வளர்மதி என்பவர் " ஜாதி புத்தி" என்பதாக சொல்லி திட்டி விட்டார்...நல்ல வேளையோ அல்லது கெட்ட வேளையோ அவர் பார்ப்பனரல்லாது போய் விட்டார் . ( அவர் பார்ப்பனரல்லர் என்பதையும் உங்களது பதிவின் மூலமாக....சொல்ல மாட்டேன்...சொல்லமாட்டேன் என்று சொல்லி ஒரு 6 நபர்களின் ஜாதிகளை சொல்லிக் காட்டினீர்களே...அதிலிருந்து தெரிந்து கொண்டேன்)...அவர் பார்ப்பனராக இருந்திருந்தால்..ஆ..சாதித் திமிரில் சொல்கிறான் என்று ஒரு கணமும் யோசிக்காமல் உடனே சொல்லலாம்...ஆனால் அது முடியாததாகி விட்டது...அதனால் வேதனையோடு விலகுகிறீர்கள்..அதற்கும் எதற்கும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை...இருந்தாலும்...நல்லதே நடக்கட்டும் ..என்று மட்டும் பொதுவாக கூறிக் கொள்கிறேன்.

பரவாயில்லை...நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்...மனிதன் தவறு செய்வது என்பது இயற்கை...அதைத் திருத்திக் கொள்வதும் இயற்கைதான்...... முன்னம் தாங்கள் சிலரை கருத்து தளத்தில் எதிற்காமல் வாய் கூசாமல் சாதியை சம்பந்தப் படுத்தி எழுதி எள்ளிய சில உதாரணங்கள் கீழே உங்கள் பார்வைக்கு....

"பாலபாரதியின் இயலாமையும் பாலாவின் பார்ப்பன ஜல்லியும்"

""'அப்பாவிப் பார்ப்பனர்க'ளின் மனதைப் புண்படுத்துகிறது என்று நினைத்தோ என்னவோ 'என்றும் அன்புடன் பாலா' என்ற நண்பர் தன்னுடைய பதிவில் இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்."""

""ஆனால் அப்படி நடந்தாலும் 'என்றும் வம்புடன்' பாலாவோ அல்லது அவரது ஒண்ணுவிட்ட, ரெண்டுவிடாத தூரத்துச் சொந்தங்களோ அனானியாகவோ அநாமதேயங்களாகவோ வந்துகேள்வி கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். நாம் என்ன செய்யவேண்டும்? 'போடா பாப்பார ஜாட்டான்' என்று போகவேண்டியதுதான்.""


இப்படியெல்லாம் முன்னே பின்னே பார்த்திராதவரை கூட வாய்க்கு வாய் அவரது ஜாதியை குறிப்பிட்டு..குறிப்பிட்டு, நமக்கு இனிக்க இனிக்க வசை பாடினோமே..அப்போது மற்ற அல்லக்கைகளும் சுகமாக சொரிந்து விடும் போது நன்றாக இருந்ததே என்பதெல்லாம் மறந்திருந்தால் சற்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள்...

அதுவும் அந்தப் பதிவு என்னுடையது..ஆனால் போட்டதற்கு சாதி சொல்லி திட்டு எ.அ.பாலாவிற்கு:)))

வாழ்க எ அ பாலா !

அப்போது அவர் """"என்மேலேயே தனிப்படட் காழ்ப்புணர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கொஞ்சமும் அறமும் நேர்மையுமில்லாமல் ஒருவன் சாதியரீதியாக அடையாளப்படுத்திவிட்டபிறகு வெறுமனே சூன்யத்தையே உணர்கிறேன்."""" என்று பதிவெழுதவில்லைதான்

ஆனாலும் மனது கஷ்டப்பட சாத்தியக் கூறுகள் உண்டில்லையா...இது தெரிந்த ஒரு உதாரணம்...இது போல் எத்தனை தளங்களில் எத்தனை பேருக்கு எத்தனை சாதீயத் திட்டுகளை தந்தோமோ...அதனால் போகிற போக்கில் இந்த மாதிரி முன்னிட்ட தீக்களுக்கு ஒரு " பொது மன்னிப்பு " கேட்டு விடுங்கள்.

இப்படி தெரியாத ஒருவரை அந்த சாதியை பிடிக்காது என்ற காரணத்துக்காக " சாதியுடன் சம்பந்தப் படுத்தி " எழுதினீர்களே உங்களைப் பற்றி நங்கு அறிமுகமுள்ள..நேருக்கு நேர் சந்தித்துமுள்ள வளர்மதி குறிப்பிட்டுள்ளது சரியாகத்தானே இருக்கும் என்று சிறுபிள்ளைத்தனமான தர்க்கம் செய்யப் போவதில்லை.. ஏனென்றால் நீங்கள் சாதீயத்திற்கும் (atleast பிராமணர்களுக்கும்) எதிரானவர் என்பதை உங்களுடைய எழுத்து மூலமாக நன்கு அறிந்தே உள்ளேன்

இங்கு நான் பார்ப்பனரை பார்க்கவில்லை..பார்ப்பனீயத்தைதான் பார்த்தேன் ..பேசினேன் என்று ஜல்லியடித்தால்


1. ""நானும் சுகுணா மற்றும் வரவனையின் பிள்ளைமாரீயத்தை தான் பேசினேன் ""என்று காம்ரேட்"வளர்மதி" எதிர் ஜல்லியடிக்கக் கூடும்.+

2."""""'பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் நிரம்பியுள்ள சூழலில்.... """ என்று எழுதும் உங்களுக்கு பார்ப்பனீயம் அல்ல பார்ப்பனர்கள்தான் எதிரிகளாக தெரிகிறார்கள் என்று நான் ஜல்லியடிக்கலாம்.

மற்றபடி உங்களது பின் நவீனுத்துவம்...கவிதை ..பற்றியெல்லாம் நமக்கு எதுவும் தெரியாது...ஆனால் நன்றாக இருக்கும் என சிலர் வலையில் பேசிக் கொண்டிருப்பதை படித்ததுண்டு.

"மாறாதது என்பது எதுவுமில்லை...மாற்றம் என்ற சொல் தவிர அனைத்தும் மாறும்" என்பது போன்ற தத்துவங்களெல்லாம் உங்களுக்கு அத்துப்படி.நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. மற்றும்

""தாக்கினால் புழுக்கள் கூட தரை விட்டுத் துள்ளும்
பருந்து தூக்கிடும் குஞ்சு காக்கத் துடித் தெழும் கோழி
மூர்க்கமாய் தாக்கும் போது முயல் கூட எதிர்த்து நிற்கும்
சாக்கடைக் கொசுக்களா நாம்...காலத்தின் சக்கரங்கள் ""


இந்தக் கவிதை கேட்ட மாதிரி இருக்கிறதா ?ஆமாம் அவருடையதேதான்...ஏதோ இந்த இடத்தில் இந்த இரண்டு விஷயங்களையும் குறிப்பிட வேண்டும் என தோன்றியது.


வாழ்வில் நீங்கள் கொண்ட பணி சிறக்க வாழ்த்தி விடை கொடுக்கும்

கி.அ.அ.அனானி
*****************************

*** 355 ***

Thursday, September 06, 2007

அறிவிலி டிராவிட்+மாவீரன் உத்தப்பா = A remarkable Indian victory

நேற்று  நடந்த இந்தியா-இங்கிலாந்து ஒரு நாள் போட்டி பற்றி தான் சொல்கிறேன்!  ஒரு நாள் தொடர் 3-2 என்று இருந்த நிலையில், இந்தியா நேற்று வென்றால் தான், லார்ட்ஸில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டி, தொடரை நிர்ணயம் செய்யும் விதத்தில், விறுவிறுப்பாக அமையும் என்பதால், இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. 

முதலில் பேட் செய்த இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்களை இழந்து (136-5, 30.2 ஓவர்கள்) தடுமாறிக் கொண்டிருந்தது. எப்போதும் போல், நம் பந்து வீச்சாளர்கள் வள்ளல்களாக மாறியதில், ரைட்டும் ஷாவும் ஜோடி சேர்ந்து 14 ஓவர்களில் 107 ரன்கள் குவித்தனர்.  ரைட் விக்கெட்டை இழந்தபோது (243-6, 44.2 ஓவர்கள்), களத்தில் நுழைந்த மாஸ்கரன்ஹாஸும் (Mascarenhas) ஷாவும் 49-வது ஓவரின் முடிவில் ஸ்கோரை 286-க்கு இட்டுச் சென்றனர். அப்போது தான் நமது கேப்டன் டிராவிட் ஒரு முட்டாள்தனமான செயலைச் செய்தார்.  ரமேஷ் பவாருக்கு ஒரு ஒவர் மிச்சமிருந்த நிலையில், பகுதி நேர பந்து வீச்சாளரான யுவராஜை இறுதி ஓவரை போட அழைத்தார் . முதல் பந்தில் ரன் இல்லை.  திடீரென்று  Mascarenhas "Massacre"nhas ஆக உருமாறி அடுத்த 5 பந்துகளில் தொடர்ந்து ஸிக்ஸர்கள் அடித்து முப்பது ரன்கள் எடுத்ததில், இங்கிலாந்தின் ஸ்கோர் 316ஐ எட்டியது.

317 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா, நமது 'வயதான' தொடக்க ஆட்டக்காரர்களின் (சச்சின், கங்குலி) அபார ஆட்டத்தால் 22.2 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்த நிலையில், கங்குலி விக்கெட்டை இழந்தார். இந்த இடத்தில், தன்னம்பிக்கை இல்லாத டிராவிட் தான் களமிறங்காமல், கம்பீரை அனுப்பி சொதப்பினார். அவரும் மட்டை மேல் மட்டை போட்டதில், அடுத்த 4 ஓவர்களில் இந்தியா 6 ரன்கள் எடுத்தது!   நழுவிப் போகின்ற டெம்போவை நிலைநிறுத்த சச்சின் மட்டையை வீசப் பார்த்ததில், காலிங்வுட் அபாரமான கேட்ச் ஒன்றைப் பிடித்து, சச்சினை பெவிலியனுக்கு அனுப்பி இங்கிலாந்து அணியினரின் வயிற்றில் பாலை வார்த்தார்!

அதன் பின் அப்படி இப்படி என்று ரன்கள் வந்தாலும், இந்தியா யுவராஜ், டிராவிட், கம்பீர் ஆகியோரை இழந்தது. தேவையான ரன் ரேட்டும் கூடிக்கொண்டு போனதில், கடைசி 9.4 ஓவர்களில் இந்தியா 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலையில், 21 வயதான நமது ஹீரோ ராபின் உத்தப்பா (தொடக்க ஆட்டக்காரரான இவர் ஏழாவது ஆட்டக்காரராக) களமிறங்கினார். இதற்கு முந்தைய (இங்கிலாந்துடனான) 5 ஒரு நாள் போட்டிகளில் இவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!  எனக்கு ஏனோ நேஷனல் ஜியாகரபி சேனலில் பார்த்த, 'சாகப்போகிறோம் என்று தெரிந்த' ஒற்றை காட்டெருமை ஐந்தாறு சிங்கங்களுடன் போராடி உயிரை விடும் காட்சி நினைவுக்கு வந்தது!

தோனியும், உத்தப்பாவும் நம்பிக்கை இழக்காமல் விளையாடினாலும், 4 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இந்திய வெற்றிக்கு 42 ரன்கள் தேவையாக இருந்தது. ஜோன்ஸ் போட்ட 47வது ஓவரை விளாசியதில் 15 ரன்கள் கிடைத்தன.  இந்திய ரசிகர்களின் டென்ஷன் எகிறிக் கொண்டிருந்தது! 3 ஓவர்களில் 27 ரன்கள் தேவை. 23 ரன்கள் தேவை என்ற நிலையில், பிராட் பந்து வீச்சில் தோனி க்ளீன் போல்ட்!!! 

ரன் ரேட் கூடி, 2 ஓவர்களில் (12 பந்துகளில்) 23 எடுத்தால் வெற்றி!  மீண்டும் ஜோன்ஸை உத்தப்பா விளாசியதில் (பந்து மட்டையின் ஓரத்தில் பட்டு விக்கெட்கீப்பரை தாண்டிச் சென்றதில், இரண்டு பவுண்டரிகள் கிட்டியது:-)) 49வது ஓவரில் 13 ரன்கள்!  கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை.  முதல் பந்தில் 2 ரன்கள், அடுத்த பந்தில் ஜகீர் கான் ரன் அவுட்! இப்போது, 4 பந்துகளில் 8 ரன்கள் தேவை.  உத்தப்பா அசரவில்லை!  பதட்டமே இல்லாமல், உத்தப்பா முன்னோக்கி நடந்து சென்று பிராடின் மூன்றாவது பந்தை அழகாக fine leg திசையில் தூக்கி அடித்ததில் வெற்றி இலக்கு நான்காகக் (3 பந்துகளில்) குறைந்தது! ஓவரின் நான்காவது பந்தை mid-off திசையில் கம்பீரமாக drive செய்தார் உத்தப்பா, டைவ் செய்த ஃபீல்டரின் கையில் சிக்காமால், பந்து பவுண்டரியை அடைய, A REMARKABLE INDIAN VICTORY :-) 

உத்தப்பா தான் நேஷனல் ஜியாகரபி சேனலில் வரும் (சிங்கங்களிடம் மாட்டிய) காட்டெருமை அல்ல, அந்த சிங்கங்களுக்கெல்லாம் 'தல' என்பதை எனக்கு உணர்த்தியது போல் தோன்றியது:-))  வென்றதில் யுவராஜுக்கு அளவில்லா மகிழ்ச்சி, கிரவுண்டுக்குள் ஓடி வந்து உத்தப்பாவை கட்டி பிடித்து ஆனந்தக் கூத்தாடினார் (பின்ன என்னவாம், கடைசி ஓவரில் 30 ரன்கள் தாரை வார்த்ததற்கு, தோற்றிருந்தால் அவரை மற்றவர் டின் கட்டியிருப்பார்கள் அல்லவா!).  லார்ட்ஸில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா வென்றாலும், தோற்றாலும் எனக்குக் கவலையில்லை! (சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன், ஜெயிக்கலேன்னா, அடுத்து ஒரு பதிவு போட்டு இந்திய அணியை ஒரு வாங்கு வாங்கிடுவோமில்ல;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 354 ***

Tuesday, September 04, 2007

353. பகல்பூரின் கற்கால மனிதர்கள்

சமீபத்தில், ஒரு வன்முறை கூட்டத்தின் பிடியில் சிக்கிய ஒரு திருடன் மீது நடந்தேறிய கொடூர வன்முறை பற்றிய செய்தியை வாசித்திருப்பீர்கள், சம்பவம் குறித்த காட்சிகளை டிவியில் பார்த்திருப்பீர்கள். Instant Justice என்ற வகையில் வழங்கப்பட்ட அந்த கொடூர அநீதிக்கு காவலரும் துணை போன கொடுமையைப் பார்த்தபோது, சூப்பர் பவர் என்ற தகுதியை நோக்கி நம் நாடு முன்னேறி கொண்டிருந்தாலும், மனோபாவத்தில் கற்காலத்தை நோக்கி பயணிப்பதாகவே தோன்றியது!

ஔரங்கசீப் என்ற இளைஞர், பகல்பூரில் ஓர் ஆலயத்தின் அருகே, ஒரு பெண்மணியின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியபோது பிடிபட்டதாகக் கூறி, ஒரு வன்முறைக் கூட்டம் அவரது கைகளை பின்புறம் கட்டி, அவரை நையப்புடைத்தது. அவரது மார்பிலும், வயிற்றிலும், முகத்திலும், முதுகிலும் மீண்டும் மீண்டும் எட்டி உதைத்து சித்திரவதை செய்ததை (CNN-IBN, NDTV) டிவியில் பார்த்தபோது, நிஜமாகவே உள்ளம் கலங்கி விட்டது. என்ன மாதிரி Mob Mentality இது!

யாரோ அழைத்து, அங்கு வந்த இரு போலீஸார், ஔரங்கசீபை அந்த வன்முறை கும்பலின் பிடியிலிருந்து மீட்பதை விடுத்து, தங்கள் பங்குக்கு, அவரது கைகளை ஒரு இருசக்கர வாகனத்தின் பின்புறம் கட்டி, வாகனத்தில் வலம் வந்தது கொடூரத்தின் உச்சம்! அங்கு நடந்த வன்முறையை ஒருவர் கூட தடுக்க முன்வராததோடு, பலரும் கை தட்டி ஆரவாரத்தோடு அதை ரசித்ததை என்னவென்று சொல்ல!

இக்காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்த CNN-IBN மற்றும் NDTV தொலைக்காட்சியினர் கூட, போலீஸின் இந்த செயலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மீடியாக்காரர் ஒருவருக்கு ஒரு சின்ன பாதிப்பு என்றால், இவர்கள் என்ன குதி குதிப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்! நிச்சயம் இவர்களால் அன்று உயர் போலீஸ் அதிகாரிகளை வன்முறை நடந்த இடத்திற்கு வரவழைத்திருக்க முடியும். ஏதோ படப்பிடிப்பு போல, கட்டற்ற வன்முறை அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.

அந்த பரிதாபத்துக்குரிய இளைஞர், உடல் முழுதும் ரத்த காயங்களோடு நினைவிழந்து போகும் வரை, வன்முறை தொடர்ந்தது! அவ்விளைஞர் மருத்துவமனை ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக மறுநாள் செய்தி வந்தது. பொதுமக்களின் ரத்த வேட்கைக்கும், பீகார் காவல் துறையில் பரவி விட்ட அழுகலுக்கும் சாட்சியாக இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது!

1980-இல் பகல்பூரில் போலீஸார் 31 கைதிகளின் கண்களில் திராவகத்தை ஊற்றிக் குருடாக்கிய பயங்கர நிகழ்வும், 1989-இல் அங்கு நடந்த மதக்கலவரத்தில் கிட்டத்தட்ட 1000 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது! அதாவது, 27 வருடங்களில் பகல்பூரின் கற்காலத்தை ஒட்டிய மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை! சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே, சட்டத்தை உடைக்கும்போது, நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது :-(

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 353 ***

Thursday, August 16, 2007

352. 123 ஒப்பந்தமும் பிரதமரின் புளுகும்

அமெரிக்காவுடனான 123 அணுசக்தி ஒப்பந்தத்தால், இந்தியா பிற்காலத்தில், அப்போதைய சூழலுக்கேற்ப
அணுகுண்டு பரிசோதனை செய்வதற்கான உரிமையை இழந்து விடவில்லை என்ற பிரதமர் மன்மோகன்சிங்கின் பாராளுமன்ற உத்தரவாதம் பச்சைப் புளுகு என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.
 
நேற்று அமெரிக்காவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர், இந்தியா எதிர்காலத்தில் அணுகுண்டு சோதனை மேற்கொள்ளும் பட்சத்தில், 123 ஒப்பந்தம் முறிந்து விடும் என்றும், எரிபொருளுக்கான பிராஸசிங் வாயிலாக கிடைக்கும் ப்ளூடோ ன்னியத்தையும், மீதமிருக்கும் யுரேனியத்தையும் இந்தியா திரும்பத் தரவேண்டி வரும் என்றும், திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அமெரிக்காவின் ஹைட் ஆக்டை(Hyde Act) மீறி, இந்தியாவுக்கு 123
ஒப்பந்தத்தின் வாயிலாக எந்த சலுகையும் கிடைக்காது, இந்தியா எதுவும் செய்ய முடியாது என்பது தான்
நிதர்சனமான உண்மை!

மெத்தப் படித்த, நேர்மையில் நம்பிக்கையுள்ள நமது பிரதமர் இப்படிப் புளுகியது ஆச்சரியமாக உள்ளது. 
அமெரிக்காவுக்கு இப்படி வால் பிடிக்க வேண்டிய அவசியம் ஏன் அவருக்கு ஏற்பட்டது என்பது புதிராகவே
உள்ளது.  மேலும், AECயின் (Atomic Energy Commission) முன்னாள் தலைவரான திரு.கோபாலகிருஷ்ணன்,  இந்த ஒப்பந்தத்தால், சாதகங்களை விட பாதகமே அதிகம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தியாவின் அணு சக்தி ஆராய்ச்சியின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு பார்த்தால், 2020-இல் இந்தியா எனெர்ஜி தன்னிறைவுக்கு வெகு விரைவில் இருக்கும் என்றும் கூறியுள்ளார். AECயின் ஒரு ஆராய்ச்சி அறிக்கையும் இதை தெளிவுபடுத்துகிறது. ஆனால், தற்போதைய AEC தலைவரும், பிரதமரின் அறிவியல் ஆலோசகரும், உண்மைகளை மறைத்து அரசுக்கு ஜால்ரா போடுவதையும் அவர் சாடியுள்ளார்.

அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்த ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்க்கிறோம் என இடதுசாரி கட்சிகளும் தொடர்ந்து கூறி
வருவதால், கூட்டணிக்கு சிக்கல் ஏற்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, மறைமுக சமரச முயற்சிகள் நிடந்து வருகின்றன. இருப்பினும், ஒப்பந்தத்தால்
ஏற்பட்ட அதிருப்தி, மன்மோகன் சிங் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கா உடனான
அணுசக்தி ஒப்பந்தத்தை, மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சிகள்
கடுமையாக எதிர்த்து வருகின்றன. "ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று பிரதமர் மன்மோகன்
சிங்கும், "எங்கள் ஆதரவினால் தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அரசு தொடர்ந்து செயல்பட
வேண்டுமா என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும்' என மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத்தும் மாறி மாறி கூறியது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இடதுசாரி தனது ஆதரவை விலக்கிக் கொள்ளுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.  ஏனெனில்,
கம்யூனிஸ்ட்கள் பல்டி அடிப்பதில் வல்லவர்கள்.  காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் நடந்து, பிஜேபி
ஆட்சிக்கு வந்து விடக் கூடிய சாத்தியம் குறித்து அவர்களுக்கு அச்சமிருக்கிறது!  123 ஒப்பந்தம் தற்போது இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு கையெழுத்தானாலும், அடுத்த தேர்தலில் மற்றொரு அரசு அமைந்து,
அவ்வரசு இந்த ஒப்பந்தத்தை கான்ஸல் செய்தால் (செய்ய முடியுமா?) நிலைமை என்னவாகும் என்பதை
யாராவது விளக்கினால் நல்லது.

எ.அ.பாலா

Monday, August 13, 2007

351. தஸ்லிமாவும் MIM அராஜகமும்

இது பற்றி ஏதாவது பதியப்பட்டு வலைப்பதிவுகளில் விவாதம் நடைபெற்றதா என்று தெரியவில்லை. என் கண்டனத்தை பதியவே இதை எழுதுகிறேன்.

பங்களாதேஷ் பெண் எழுத்தாளர் தஸ்லிமா MIM சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொ(கு)ண்டர்களால் ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது தாக்கப்பட்டதை வாசித்திருப்பீர்கள், தொலைக்காட்சியிலும் அந்த அராகஜ வன்முறையை பார்த்திருப்பீர்கள்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், குண்டர்கள் போல் நடந்து கொண்டதோடு அல்லாமல், பின்னரும் அந்த கேவலமான செயலுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. நல்லவேளை, தஸ்லிமாவை உடன் இருந்த மீடியாக்காரர்கள் பெரும் ஆபத்திலிருந்து காத்துள்ளனர்.

இந்த அராஜக நிகழ்விற்கு உச்சமாக, MIM தலைவர் அக்பரூதின் ஓவைஸி, தஸ்லிமா மறுமடியும் ஐதரபாத் வந்தால், அவர் தலை கொய்யப்படும் என்று தலிபான் தலைவர் போல் ஒரு அராஜக மிரட்டல் விடுத்துள்ளார்! நாம் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் இருக்கிறோமா அல்லது இந்தியாவில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. இதே அக்பருதீன் MIM ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் கைது செய்ய விடாமல் தடுத்து பெரும் ரகளையும் செய்தார்.

ஜனநாயகத்திலும், கருத்துச் சுதந்திரத்திலும், மதச் சார்பின்மையிலும் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜூவி கட்டுரை ஒன்றில், இந்த தாக்குதலை முன்னின்று நடத்தியவர்களை கடுமையாக கண்டித்து எழுதியுள்ள கவிஞர் இன்குலாப், பாபர் மசூதியை இடித்ததற்கும், தஸ்லிமாவை அடித்ததற்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்கிறார். மேலும், 'ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஆண்கள் மணந்து கொண்டது போல் நானும் எனக்கு வசதியிருந்தால் பல ஆண்களை மணந்து கொண்டிருப்பேன்' என்ற தஸ்லிமாவின் விமர்சனத்தின் அடிப்படையில், பழமைவாதிகள் ஆராயாமல் அவரை ஒழுக்கம் கெட்டவள் என்பதையும், பாபர் மசூதி இடிப்பின் எதிர்வினையாக, பங்காளாதேஷில் சிறுபான்மை இந்து சமூகம் தாக்கப்பட்ட நிகழ்வுகளை தகுந்த ஆதாரங்களோடு தமது 'லஜ்ஜா' நாவலில் தஸ்லிமா அம்பலப்படுத்தியிருப்பதால் அவர் இஸ்லாத்திற்கு எதிரானவர் ஆகி விட்டதையும், இன்குலாப் வேதனையோடு குறிப்பிடுகிறார்.

தஸ்லிமாவின் 'லஜ்ஜா' என்ற நாவலை மேற்கு வங்காள அரசு ஏற்கனவே தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது! இன்குலாப், "பாசிஸம் என்பது நாஜிக்களுக்கு மட்டும் உரியது அன்று, எந்த பழமைவாத மூர்க்கர்களுக்கும் இந்த பாசிஸம் உரியது என்பதைத் தான் ஐதரபாத்தில் நடந்தேறிய தாக்குதல் எடுத்துக் காட்டுகிறது! இதை ஜனநாயகவாதிகள் எதிர்த்து முறியடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாதை ஒரு நிருபர் அவர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறா என்று வினவியபோது, அவர்,"தஸ்லிமாவையும் கண்டிக்கிறேன், தாக்கியவர்களையும் கண்டிக்கிறேன்" என்று திருவாய் மலர்ந்து காமெடி செய்தார். பாவம், காஷ்மீரில் அவர் நிலைமை அப்படி!

தஸ்லிமாவை தாக்கிய MIM சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீது கொலை முயற்சிக்கான வழக்கு பதியாமல், ஐதரபாத் போலீஸார் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்ததற்காகவும், பொருட்களை சேதப்படுத்தியதற்காகவும் வழக்கு தொடுத்துள்ளது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை (இதனால் தாக்கியவர்களுக்கு சுலபமாக பெயில் கிடைத்து விட்டது!) அரசு எவ்வழி, போலீஸ் அவ்வழி! இதே போலீஸார் சமீபத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சகோதரரை ஒருவர் அடித்த ஒரு சாதாரண செயலுக்கு அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததை இங்கே நினைவு கூர்வது அவசியமாகிறது!

இந்த நிகழ்வுக்கு முன்பே, தஸ்லிமா பல எதிர்ப்புகளை சந்தித்திருந்தாலும், தான் இம்முறை மரணத்திற்கு அருகில் இருந்ததாக உணர்ந்ததாகவும், உடன் இருந்த மீடியாக்காரர்கள் தான் தன்னை உயிராபத்திலிருந்து காத்து மீட்டதாகவும் தஸ்லிமா கூறியுள்ளார். கருத்தை கருத்து மூலம் எதிர்கொள்ளாமல் பேசுபவரின் வாயையும், எழுதுபவரின் கையையும் வன்முறையின் துணை கொண்டு முடக்கும் செயல்கள் தற்போது அதிகரித்து வருகிறது!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 351 ***

Tuesday, July 03, 2007

350. கண்டேன் 'சிவாஜி'யை!

ஒரு வழியாக சனிக்கிழமை (30/6/07) சிவாஜி திரைப்படத்தை சத்யம் தியேட்டரில் காண வாய்ப்பு கிடைத்தது. சக தலைவர் ரசிகர்களான ஐகாரஸ் பிரகாஷ¤ம், ரஜினி ராம்கியும் விரிவாக விமர்சனம் எதுவும் எழுதியதாகத் தெரிவில்லை :) ஐகாரஸ் ஓரிண்டு வாக்கியங்களில் ஒரு விமர்சனம் எழுதி, முத்தாய்ப்பாக ஒரு அற்புதமான ஷாட் அடித்திருந்தார்!

Rajnikanth is a phenomenon which cannot be understood by those who didnt watch his movies when they grew up. எவ்வளவு யதார்த்தமான உண்மை!


இணையத்தில், தனிமனித காழ்ப்பு மிக்க விமர்சனங்கள் இறைந்திருந்தன. அது எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதால் ஆச்சரியம் எதுவுமில்லை. என்னவோ, பாமர ஜனங்களை அவர் அடித்துப் பிடுங்குவது போல் ஒரு தோற்றத்தை அவை ஏற்படுத்தின. உண்மையை சொல்லப்போனால், பலதரப்பட்ட மக்களையும் காந்தம் ஓர் கவர்ந்து தன் ரசிகர்களாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்ற ஆளுமை. ஒரு 3 மணி நேரம் நம் கவலைகளை மறக்கடிக்க வல்ல ஒரு சூப்பர் Entertainer ரஜினி !

எனக்கு சட்டென்று மனதில் பட்டது, படம் ரொம்ப நீளம், இரண்டாவது பாகம் இழுவை தான்! 'ரஜினி படம்' என்பதால் மட்டுமே உட்கார முடிந்தது என்பது நிஜம். முதல் பாதி ரஜினி, விவேக் அடிக்கும் லூட்டிகளால் ஜாலியாகப் போனாலும், திரைக்கதையில் தொடர்பு அறுந்து காட்சிகள் சொருகப்பட்டிருப்பது போல் ஒரு தோற்றம்! ஸ்டைல், சண்டை, மிகை/மிகையில்லாத நடிப்பு, காமெடி என்று ரஜினி அனைத்திலும் பின்னிப் பெடலெடுத்து விட்டார்! ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமே! சங்கர் எப்போதும் போல பிரும்மாண்டம், தொழில் நுட்பம் ஆகியவற்றின் துணையை நாடியிருந்தாலும், ரஜினி ·பார்முலாவை புரிந்து கொண்டு படமெடுத்திருக்கிறார்.

ரஜினி படத்திற்கு பெரிய அளவில் கதை தேவைப்படுவதில்லை! அவர் ஆளுமையை சரியாக பயன்படுத்த வேண்டும், அதை சங்கர் உருப்படியாகவே செய்திருக்கிறார் என்பது என் கருத்து. சகலத்தையும் இழந்து, மீண்டும் பெரிய ஆளாக ரஜினி உருவெடுப்பதை படையப்பா, அண்ணாமலை போன்ற திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அதனுடன், சங்கரின் "பவர்·புல்" சோஷியல் மெசேஜை (கறுப்புப்பண ஒழிப்பு) கலந்தால், சிவாஜி கதை:) இந்தக் கதை வெளியில் தெரியாமலிருக்கவா, சங்கர் இத்தனை பிரயத்தனப்பட்டார் என்று தோன்றியது நிஜம்! அன்னியன், இந்தியன் அளவு கூட கதை இல்லை, நல்ல வேளை, ரஜினி படத்தை காப்பாற்றி விட்டார்!

படம் முழுக்க ரஜினியுடன் வரும் விவேக், தன் பாணி அறிவுரை எதுவும் வழங்காமல் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். அந்த "ஸிக்ஸ்க்கு அப்புறம் செவன்டா, சிவாஜிக்கு அப்புறம் எவன்டா" பஞ்ச் சூப்பர். சூப்பர்ஸ்டார் கனவுகளோடு அலையும் விடலைகளுக்கும், மற்றவர்களுக்கும் புரிந்தால் சரி தான் ;-)

ஷ்ரேயா introduce ஆகும் காட்சியிலேயே ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டேன், ஷ்ரேயாவுக்காக இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் என்று, ஏனெனில், முதல் தடவை பார்ப்பது ரஜினிக்காக மட்டுமே அல்லவா ? அம்மணியின் கண்களைப் பார்த்தால் நடிப்பு வரும் போல் தான் தோன்றுகிறது. ஆனால், எந்த இயக்குனர் அவரை நடிக்க விடுவார் என்ற சந்தேகமும் வருகிறது! கொடுத்த ரோலை கச்சிதமாக செய்திருக்கிறார். பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளில் தன் முன்/பின் அதிர்வுகளால், நம் மனதில் பல அதிர்வுகளை ஏற்'படுத்துகிறார்'! அதுவும், தன் சிவப்புத் தாவணியை வீசி ஷ்ரேயா ரயிலை நிறுத்தும் காட்சியில் எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்தது!

சுஜாதா வசனங்கள் நறுக்! உதாரணம் 'சாகற நாள் தெரிஞ்சுப் போச்சுன்னா, வாழற நாள் நரகமாயிடும்' வசனம் ! இவ்வளவு புதுமுகங்கள் (ராஜா, உமா பத்மநாபன், சாலமன் பாப்பையா ...) நடிச்ச படத்தில், சுஜாதாவுக்கும் ஒரு சின்ன ரோல் கொடுத்திருக்கலாம் :) வில்லன் சுமன் சுமார் தான், ரகுவரனையே போட்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.

படத்தில் மிகவும் அபத்தமாகப் பட்ட 2 விஷயங்களைச் சொல்கிறேன். கறுப்புப்பணத்தை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று, ஊழல்வாதிகளுக்கு நெருங்கிய ஆட்களை ஒரு இடத்தில் கூட்டி, அவர்களை அடித்து உதைத்து உண்மையை வரவழைப்பதும் (சுஜாதா இருந்தும் இப்படியா ?), இவ்வளவு கண்ணுக்கு ரம்மியமான படத்தில், ஷ்ரேயாவுக்கு அப்பாவாக வரும் ராஜா, ஓரிரு காட்சிகளில் மிக அழுக்கான, வியர்வை சொட்டும் பனியனுடன் தோன்றுவதும் உறுத்தலாக இருந்தது.

திரைப்படத்தில், பலரது (ஒளிப்பதிவாளர் ஆனந்த், ரஹ்மான், பீட்டர் ஹெயின், தோட்டா தரணி, நடன இயக்குனர்கள்) உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. அதற்காக, இவ்வளவு (80 கோடி) செலவழித்திருக்க வேண்டுமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அதில் பாதி செலவழித்து இருந்தால் கூட, சிவாஜி மகத்தான வெற்றி பெற்றிருக்கும் என்று திடமாகக் கூற முடியும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 350 ***

Wednesday, June 06, 2007

349. "மோசடி தாத்தாவும் மோடி வித்தை பேரனும்' - ஜெ. சொன்ன கதை

ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறிய கதை:

இப்போது நடந்து வரும் வாரிசு சண்டையை பார்க்கும்போது எனக்கு கதை வடிவில்
உள்ள நாடகம் நனைவுக்கு வருகிறது. ஒரு பெரியவரை தேடி பேரன் வயதில் ஒருவர்
வந்தார். "தாத்தா என்னை ஞாபகம் இருக்கிறதா?' என்று கேட்டார். அவரை
உற்றுப்பார்த்த பெரியவர், "இல்லையே' என்றார். "பத்து வருடத்திற்கு முன்பு
நான் வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டபோது நீங்கள் வேறொருவரிடம் இருந்து
பத்தாயிரம் ரூபாய் வாங்கி தந்தீர்கள். அதன் மூலம் என் வாழ்க்கைக்கு
விளக்கேற்றி வைத்தீர்கள்' என்றார் பேரன்."அப்படியா பேராண்டி. அது
வேறொருவருடைய பணம் தானே? அதற்காக இப்போது வந்து நன்றி சொல்ல வேண்டிய
அவசியம் இல்லையே' என்றார் தாத்தா. அதற்கு பேரனோ, "நான் அதற்காக வரவில்லை.
அதே போல் இன்னொரு தடவை என் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்க முடியுமா
என்று கேட்கத்தான் வந்தேன்' என்றார் பேரன். இவ்வாறு ஜெயலலிதா சொன்னார்.

<b>நன்றி: தினமலர்</b>

Saturday, June 02, 2007

348. மதுரை திவ்யதேசப் பயணம் - திருக்கோட்டியூர் - Part 1

ஏற்கனவே திட்டமிட்டு, சில பாண்டிய நாட்டு திவ்ய தேசப் பெருமாள்களை தரிசிக்க வேண்டி, சென்ற வாரம் சென்னையிலிருந்து மதுரை (நானும், துணைவியாரும், குழந்தைகளும்) சென்றோம். அப்பயணத்தில், திருமோகூர், திருக்கூடல், திருமாலிருஞ்சோலை (கல்லழகர்), திருக்கோட்டியூர், திருமெய்யம் ஆகிய வைணவ திருப்பதிகளுக்கும், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய அறுபடை வீடுகளுக்கும், பிள்ளையார்பட்டி மற்றும் திருமெய்யம் சத்யமூர்த்திப் பெருமாள் கோயில் அருகில் அமைந்துள்ள சத்யகிரீஸ்வரர் ஆலயத்துக்கும் சென்று வழிபட்டு, கொஞ்சம் புண்ணியம் தேட முடிந்தது :)

பயணக் கட்டுரையை திருக்கோட்டியூரிலிருந்து தொடங்குகிறேன்.

இந்த வைணவ திவ்யதேசம், ராமநாதபுரம் மாவட்டத்தில், திருப்பத்தூர் தாலுக்காவிலிருந்து 7 மைல் தொலைவில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 100 கிமீ. காரைக்குடியிலிருந்தும் இத்தலத்திற்குச் செல்ல முடியும். மதுரையிலிருந்து காலை 8 மணிக்கே கிளம்பி, ஏசி காரில் பயணத்தை மேற்கொண்டதால், வெளியே சுட்டெரித்த வெயிலின் கடுமை தெரியவில்லை. நெடுஞ்சாலையில் காரின் வேகம் நூறைத் தொட்டபோது, சிடி பிளேயரில் பாட்டு கேட்கலாம் என்று போட்டால், TMS "நான் ஒரு ராசியில்லா ராஜா" என்று அழ ஆரம்பிக்கவே, பாட்டு கேட்கும் ஆசை போய் விட்டது!

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒன்றரை மணி நேரத்தில் திருக்கோட்டியூர் சென்றடைந்தோம். காதம்ப மகரிஷி வாழ்ந்து, பெருமானை வழிபட்ட புண்ணியத் தலமிது! அமைதியான சூழலில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பிரகாரம் கொண்ட கோயில் ! தேவர்களும், ரிஷிகளும் ஒரு கோஷ்டியாக (group) ஸ்ரீமன் நாராயணனை இங்கு வணங்கியதால், இத்தலம் திருக்கோட்டியூர் என்ற காரணப்பெயரைப் பெற்றது. அவர்கள் கோஷ்டியாக இங்கு கூடியதன் காரணம், ஹிரண்யனை அழிக்க பெருமானிடம் முறையிடுவதற்காக !

சௌம்ய நாராயணன்
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
உரகமெல்லணையான் என்றழைக்கப்படும் மூலவர், கிழக்கு நோக்கி புஜங்க சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். பிராட்டிகளுடன் இருந்த உத்சவ மூர்த்தி சௌம்ய நாராயணப் பெருமாள் (மாதவன்) பேரழகு! மிக அற்புதமான சேவை. உத்சவப்பெருமாளின் விக்ரகமும், மற்ற மூன்று பிராட்டியரின் விக்ரகங்களூம் (மூலவர் சன்னதியில் உள்ள இரண்டும், தாயாருக்கான தனிச்சன்னதியில் உள்ள விக்ரகமும்) இந்திரனால் காதம்ப மகரிஷிக்கு வழங்கப்பட்டன என்று தலபுராணாம் கூறுகிறது.

சரபேஸ்வரர்
Photo Sharing and Video Hosting at Photobucket
கோயில் உள்ளே நுழைந்தவுடன், திருமாமணி மண்டபத்தைக் காணலாம். அங்கு சுயம்புவாக உருவான (சற்றே சிதிலமடைந்த) சரபேஸ்வரர் அருள் பாலிக்கிறார். இதற்குப் பின்னால் ஒரு சுவையான பழங்கதை உண்டு. நரசிம்ம அவதாரமெடுத்து ஹிரண்யனை வதம் செய்த பின், பெருமானின் உக்ரத்தைக் கண்டு அஞ்சி அவர் அருகே செல்ல திருமகளுக்கே துணிவு வரவில்லை. அந்த உக்ரத்தால், பூவுலகே அமைதியிழந்தது. அப்போது, சிவபெருமான், திருமாலை சாந்தப்படுத்துவதற்காக 'சரப' (மனித/சிங்க/பறவையின் அங்க அவயங்களால் ஆன உக்ர) வடிவமெடுத்து, நரசிம்மாவதரப் பெருமாளை சண்டைக்கு அழைத்தார். சிறிது நேரத்தில், சரப வடிவில் வந்து தன்னுடன் மோதுவது சிவனே என்றுணர்ந்த பெருமாள், தன் உக்ரத்தை விலக்கிக் கொண்டு சாந்தமானார் என்பது ஐதீகம்!

இத்தலத்திற்கு 'த்வயம் (இரண்டு) விளைந்த திருப்பதி' என்ற காரணப் பெயரும் உண்டு. அதாவது, இரண்டு அருளிச் செயல்கள் நிகழ்ந்த காரணத்தால்! ஒன்று, தேவர்களுடன் அணி சேர்ந்து, திருப்பாற்கடல் அமுதத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்த பரந்தாமனின் தெய்வச் செயல், மற்றொன்று, அஷ்டாட்சர மந்திரத்தை எந்தை ராமானுஜ முனி உலகுக்கு அருளிய புண்ணிய நிகழ்வு!

தாயார்
Photo Sharing and Video Hosting at Photobucket
தாயார் திருமகள் நாச்சியாருக்கும், ஆண்டாளுக்கும் தனிச் சன்னதிகள் உண்டு. தாயார் சன்னதி பூட்டியிருந்ததால், அர்ச்சகருக்கு சொல்லியனுப்பி, காத்திருந்து தாயாரை கண் குளிர சேவித்தோம். திருமாமணி மண்டபத்தின் வடப்புறம் கோதண்டராமர் சன்னதியும், தெற்குப் பக்கம் நரசிம்மர் சன்னதியும் உள்ளன.

நரசிம்மப் பெருமான் கோலங்கள்
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
இந்த நரசிம்மர் சன்னதி முன்பு தான், திருக்கோட்டியூர் நம்பி, ராமானுஜருக்கு அஷ்டாட்சர மந்திர உபதேசம் செய்தார். வெளிப்பிரகாரத்தில், பரமபத வாசலுக்கு அருகே, ஹிரண்ய வதத்தை விளக்கும் இரண்டு நரசிம்மப் பெருமாளின் சிற்பங்கள், சிறிய சன்னதிகளில் காணப்படுகின்றன.

உபேந்திரன்
Photo Sharing and Video Hosting at Photobucket
ஸ்தித நாராயணன்
Photo Sharing and Video Hosting at Photobucket
இந்த புண்ணியத்தலத்திற்கு ஒரு சிறப்புண்டு. திருப்பாற்கடல் நாதனாக சயன திருக்கோலத்தில் பிரதான சன்னதியில் காட்சி தரும் மூலவப்பெருமாள், இங்குள்ள அஷ்டாங்க விமானத்தின் இடை நிலையில், உபேந்திரன் (க்ஷீராப்திநாதன்) என்ற திருநாமத்துடன், நின்ற திருக்கோலத்திலும், விமானத்தின் மேல் நிலையில், பரமபதநாதனாக, ஸ்தித நாராயணன் என்ற திருநாமத்துடன் (பூமாதேவி மற்றும் பெரிய பிராட்டியுடன்) வீற்றிருந்த திருக்கோலத்திலும் அருள் பாலிக்கிறார் !

இங்குள்ள அஷ்டாங்க விமானம் 96 அடி உயரம் கொண்டது. பலப்பல அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. விமானத்தில், அமர்ந்த கோலத்தில் உடையவரும், பெருமாளின் தசாவதாரமும், இந்திரலோகக் காட்சிகளும், சப்தரிஷிகளும், தேவர்களும், முனிவர்களும் ஆழ்வார்களும் அழகாகச் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

அஷ்டாங்க விமானத் தோற்றம்
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
கோயிலில் பணி புரியும் முத்துத்தேவர் என்ற பெரியவர் தான், குறுகிய படிக்கட்டு வாயிலாக விமானத்தின் உச்சி வரை சென்று, உபேந்திரரையும், பரமபதநாதனையும் தரிசிக்க உதவி செய்தார். இத்தலத்தைப் பற்றியும், உடையவர் குறித்தும் பல தகவல்களையும், தலம் பற்றிய நாலாயிரப் பாசுரங்களையும் அவர் மடை திறந்தாற்போல் சொல்லியது என்னை நிஜமாகவே ஆச்சரியப்படுத்தியது!

வைணவராய் இருப்பதற்கு, வைகுண்டநாதன் மேல் பக்தி ஒன்றே போதுமானது என்பதை அவர் உணர்த்தினார்!! 'இங்கு எம்பெருமானார் என்றழைக்கப்படும் ராமானுஜர், திருக்காஞ்சியில் பாஷ்யகாரர் என்றும், ஸ்ரீபெரும்புதூரில் உடையவர் என்றும் அழைக்கப்படுகிறார்' போன்ற பல உபரித் தகவல்களையும் வழங்கிய முத்துத்தேவருக்கு சன்மானம் வழங்கி நன்றி தெரிவித்தேன்.

எந்தை இராமானுச முனி
Photo Sharing and Video Hosting at Photobucket
மற்றுமொரு சிறப்பு, ராமானுஜர் இக்கோயிலின் கோபுரத்திலிருந்து தான், தன் ஆச்சார்யரான திருக்கோட்டியூர் நம்பி அவருக்கு உபதேசித்த அஷ்டாட்சர மந்திரத்தை உரக்கக் கூவி, அதன் அர்த்தத்தை சாதி பேதமின்றி உலகத்தார் அனைவரும் அறிந்து கொள்ளும்படி செய்தார். ரகசியமாக வைத்திருக்க வேண்டிய மந்திரத்தை ஊருக்கே உபதேசித்த ராமானுஜரிடம் திருக்கோட்டியூர் நம்பி, 'குருவின் பேச்சைக் கேட்காத சீடன் நரகத்துக்குச் செல்வான்' என்று கோபமாகக் கூற, அதற்கு ராமானுஜர், "இதனால் நான் ஒருவன் நரகத்துக்குச் சென்றாலும், என் உபதேசத்தைக் கேட்ட மக்கள் அனைவருக்கும் நாராயண கடாட்சமும், மோட்சமும் கிடைக்குமே, என்னை மன்னியுங்கள்!" என்று பதிலுரைக்க, தன் தவறை உணர்ந்த நம்பி, அவரை ஆரத்தழுவி, "நீரே எம்பெருமானார்" என்று மகிழ்ச்சியுற்றார். ராமானுஜர், 'எம்பெருமான்' என்று அழைக்கப்படுவது, இந்த நிகழ்வை வைத்துத் தான்!

நர்த்தனக் கண்ணன்
Photo Sharing and Video Hosting at Photobucket
கோயிலில் திருக்கோட்டியூர் நம்பி மற்றும் உடையவரின் விக்ரகங்கள் உள்ளன. மூலவர் சன்னதியில் சந்தானகிருஷ்ணரின் திருவிக்ரகத்தையும் காணலாம். இவரை வேண்டி விளக்கு பூஜை செய்யும் பெண்டிருக்கு நல்ல துணையும் பிள்ளைப்பேறும் கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும், இத்தலம் 'தெற்கின் பத்ரிநாத்' (Badri of the South) என்று போற்றப்படுகிறது. பெரியாழ்வார், தனது மங்களாசாசனப் பாசுரங்களில் (21), திருக்கோட்டியூரை 'ஆயர்பாடி' என்றே புகழ்ந்து பாடியுள்ளார்!

புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் உண்டு. வைகுண்ட ஏகாதசியும், ஆடிப்பூரமும் சித்திரை மாதத்தில் பிரம்மோத்சவமும் இங்கு கொண்டாடப்படுகின்றன. இங்குள்ள தீர்த்தம் (குளம்) தேவ புஷ்கரிணி என்றழைக்கப்படுகிறது. இங்குள்ளதைப் போன்ற (சற்றே அரிதாகக் காணப்படும்) அஷ்டாங்க விமானத்தை மதுரை திருக்கூடல் தலத்திலும், காஞ்சியில் அமைந்த வைகுந்தப் பெருமாள் (பரமேஸ்வர விண்ணகரம்) கோயிலிலும் காணலாம்.

திருப்பதி, திருவரங்கத்தை அடுத்து அதிகமான பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது திருக்கோட்டியூர் தான். இத்திருத்தலத்தை நம்மாழ்வார் 10 பாசுரங்களிலும், பெரியாழ்வார் 21 பாசுரங்களிலும், திருமங்கையாழ்வார் 13 பாசுரங்களிலும், பூதத்தாழ்வார் 2 பாசுரங்களிலும், பேயாழ்வார் 1 பாசுரத்திலும், திருமழிசையாழ்வார் 1 பாசுரத்திலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். அவற்றில், சிலவற்றைக் காணலாம்.

பெரியாழ்வார்

13@..
வண்ண மாடங்கள்சூழ் *திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன்* நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம்* எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம்* கலந்து அளராயிற்றே.

18@
கையும் காலும் நிமிர்த்துக் *கடார நீர்*
பையவாட்டிப்* பசுஞ்சிறு மஞ்சளால்*
ஐயநாவழித்தாளுக்கு* அங்காந்திட*
வையம் ஏழும் கண்டாள்* பிள்ளை வாயுளே.

173@
கொங்கும் குடந்தையும்* கோட்டியூரும் பேரும்*
எங்கும் திரிந்து* விளையாடும் என்மகன்*
சங்கம் பிடிக்கும்* தடக்கைக்குத் தக்க*நல்
அங்கமுடையதோர் கோல்கொண்டுவா.
அரக்குவழித்ததோர் கோல்கொண்டுவா.

363@
உரகமெல்லணையான்கையில்* உறைசங்கம்போல்மடவன்னங்கள்*
நிரைகணம்பரந்தேறும்* செங்கமலவயல் திருக்கோட்டியூர்*
நரகநாசனைநாவில் கொண்டழையாத* மானிடசாதியர்*
பருகுநீரும்உடுக்குங்கூறையும்* பாவம்செய்தனதாங்கொலோ.

369@
காசின்வாய்க்கரம்விற்கிலும்* கரவாதுமாற்றிலிசோறிட்டு*
தேசவார்த்தைபடைக்கும்* வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்*
கேசவா. புருடோத்தமா.* கிளர்சோதியாய். குறளா. என்று*
பேசுவார்அடியார்கள்* எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே.

திருமங்கையாழ்வார்

1840@
வெள்ளியான் கரியான்* மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை,* எமக்கு-
ஒள்ளியான் உயர்ந்தான்* உலகேழும் உண்டுமிழ்ந்தான்,*
துள்ளுநீர் மொண்டு கொண்டு* சாமரைக் கற்றை சந்தன முந்தி வந்தசை,*
தெள்ளுநீர்ப் புறவில்* திருக்கோட்டியூரானே. 9.10.3

க்ருதா யுகத்தில் வெண்ணிற மேனியானாகவும், கலியுகத்தில் கருமை நிறத்தவனாகவும், த்வாபர யுகத்தில் மரகதமணியால் ஆன பச்சை மாமலை போன்றவனாகவும் திகழ் பரந்தாமனே நித்யசூரிகளின் இறைவன், உணர்வதற்கரிய உயர்ந்த பரம்பொருள்! இத்தனை சிறப்புடையவனாக இருந்தும், தன்னுருவை முழுவதுமாக எனக்குக் காட்டி எனக்கருளியவன் அந்த எம்பெருமான்! அவனே, பிரளய காலத்தில், ஏழுலகையும் (காக்க வேண்டி) உண்டு பின் உமிழ்ந்தவன். வாசனை மிகு சந்தன மரக்கிளைகளை சுமந்து வரும் ஆற்று நீர் ஓடி வரும் செழுமை மிக்க திருக்கோட்டியூரில், அப்பிரானே எழுந்தருளியுள்ளான்.

1842@
வங்க மாகடல் வண்ணன்* மாமணி வண்ணன் விண்ணவர் கோன்* மதுமலர்த்
தொங்கல் நீள்முடியான்* நெடியான் படிகடந்தான்,*
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி* மாகமீது உயர்ந்தேறி,* வானுயர்-
திங்கள் தானணவும்* திருக்கோட்டியூரானே.9.10.5

வங்கக்கடலையொத்த கருமை நிறத்தவனும், நீலமணி வண்ணனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனும், தேன்மலர் சூடிய நீண்ட முடி உடையவனும், நெடியவனும், ஒரு சமயம் தன் திருவடியால் உலகளந்தவனும் ஆன எம்பெருமான், மணிக்கற்கள் பதிக்கப்பட்ட வானளாவிய மாடங்களில் பறக்கும் வெண்கொடிகள் வெண்ணிலவைத் தொடுவது போல் காட்சியளிக்கும் அழகிய திருக்கோட்டியூரில் கோயில் கொண்டுள்ளான்!

1844@
கன்று கொண்டு விளங்கனி எறிந்து* ஆநிரைக்கு அழிவென்று,* மாமழை-
நின்று காத்துகந்தான்* நிலமாமகட்கு இனியான்,*
குன்றின் முல்லையின் வாசமும்* குளிர்மல்லிகை மணமும் அளைந்து,* இளந்-
தென்றல் வந்துலவும் * திருக்கோட்டியூரானே. 9.10.7

கன்று வடிவில் வந்த வத்சாசுரனை விளாங்கனி மரத்தில் எறிந்து மாய்த்தவனும், கோவர்த்தன மலையை குடையாக்கி பசுக்களையும், ஆயரையும் பெருமழையிலிருந்து காத்து ரட்சித்தவனும், பூமி பிராட்டிக்கு உகந்தவனும் ஆன எம்பெருமான், மலையில் பூக்கும் முல்லை, மல்லிகை மலர்களின் வாசத்தை சுமந்து வரும் இளந்தென்றல் வீசும் திருக்கோட்டியூரில் ஆட்சி புரிகிறான்!


பூதத்தாழ்வார்

2227@
பயின்றது அரங்கம் திருக்கோட்டி,* பன்னாள்-
பயின்றதுவும்* வேங்கடமே பன்னாள்,* - பயின்றது-
அணிதிகழும் சோலை* அணிநீர் மலையே*
மணிதிகழும் வண்தடக்கை மால்.

2268@
இன்றா அறிகின்றேன் அல்லேன்* இருநிலத்தைச்-
சென்று ஆங்கு அளந்த திருவடியை,* - அன்று-
கருக்கோட்டியுள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்,*
திருக்கோட்டி எந்தை திறம்.

பேயாழ்வார்

2343@
விண்ணகரம் வெ·கா* விரிதிரைநீர் வேங்கடம்,*
மண்ணகரம் மாமாட வேளுக்கை,*- மண்ணகத்த
தென்குடந்தை* தேனார் திருவரங்கம் தென்கோட்டி,*
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.

திருமழிசையாழ்வார்

2415@
குறிப்பு எனக்குக்* கோட்டியூர் மேயானையேத்த*
குறிப்பு எனக்கு நன்மை பயக்க*
வெறுப்பனோ வேங்கடத்து மேயானை* மெய்வினைநோய் எய்தாமல்*
தான்கடத்தும் தன்மையான் தாள்

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, June 01, 2007

347. தினகரன் ஆபிஸ் - புயலுக்குப் பின்னே அமைதி!

Photo Sharing and Video Hosting at Photobucket

*** 347 ***

Tuesday, May 15, 2007

346. இட்லிவடைக்கு நன்றி

இட்லிவடைக்கு நன்றி

"நேற்று மாலையில் தயாநிதி மாறன் சிஐடி நகரில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரை பார்க்க முதல்வர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் அங்கேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் வெளியே வந்த போது அவரை கோபமாக பார்த்து, "அழகிரி யார் தெரியுமா? அவன் என் மகன்" என்று கூறிவிட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது."

நல்ல மகன் ! நல்ல அப்பா ! வாழ்க தமிழ்த் திருநாடு !

*** 346 ***

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails